கருணாநிதியை ஆட்டி வைக்கும் 'அதிகார மையங்கள்'- ஜெ

அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
பொது மக்களுக்கு நன்மை அளிக்கும் புதிய திட்டங்கள் குறித்து விவாதிப்பதற்கும், கொள்கை முடிவு எடுப்பதற்கும், ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்ட திட்டங்களால் மக்கள் பாதிப்படைந்திருந்தால் அது குறித்து ஆராய்வதற்கும் தான் பொதுவாக அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டம், சட்டசபை கட்சித் தலைவர்கள் கூட்டம் ஆகியவை கூடுவது வழக்கம்.
ஆனால், திமுகவினர் பயன்பெறும் வகையில், மணல் குவாரி விவகாரத்தில் தன்னிச்சையாக முடிவெடுத்து விட்டு, பின்னர் எதிர்ப்பு வந்ததும் அதை சமாளிக்க சட்டசபை கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டிய கேலிக்கூத்து வேறு எந்த மாநிலத்திலும் நடந்ததில்லை.
ஏற்கனவே நடைமுறையில் இருந்து வரும் திட்டத்தை அரசு தொடர்ந்து செயல்படுத்தும் என்று அறிவிக்க ஒரு அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டம் தேவையா?.
புதிய முடிவு எடுப்பதாக இருந்தால் இத்தகைய கூட்டத்தை கூட்டலாம். அரசே தொடர்ந்து மணல் குவாரிகளை இயக்கும் என்று அறிவிப்பதாக இருந்தால், இந்த கூட்டத்தை ரத்து செய்துவிட்டு, அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டால் போதுமே?
ஏற்கனவே உள்ள திட்டத்தை தொடரும் என்று அறிவிக்க அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கூட்டும் கேலிக்கூத்து இந்தியாவில் வேறு எங்கும் நடைபெறாது. அனைத்துக் கட்சித் தலைவர்களின் நேரத்தையும், அரசின் பணத்தையும் வீணடிக்கும் கருணாநிதியின் செயல் கண்டிக்கத்தக்கது.
முதல்வர் கருணாநிதியின் நடவடிக்கைகளைப் பார்க்கும் போது அவர் சுயமாக செயல்படுகிற, கொள்கைப் பிடிப்புடன் இருக்கிற ஒரு முதல்வராக தெரியவில்லை.
பல்வேறு அதிகார மையங்கள் அவரை ஆட்டி வைப்பதாக தமிழக மக்கள் கருதுகின்றனர். துணை நகரம், நெய்வேலி பங்கு விவகாரம், குடிநீருக்கு மீட்டர் பொருத்துதல், தன்னுடைய பிறந்த நாள் என முடிவுகளை அறிவித்து, எதிர்ப்பு கிளம்பியதும் முடிவை மாற்றிக் கொண்டு விட்டார் கருணாநிதி.
பூங்கோதை ராஜினாமா கடிதத்தின் மீது முடிவெடுக்கவே இந்த அரசுக்கு ஒரு வாரம் தேவைப்பட்டது.
சட்டசபை கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், மணலை அரசே விற்பனை செய்யும் என்று எடுக்கப்பட்ட முடிவு அதிமுகவுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி.
அடிக்கடி தனது முடிவை மாற்றிக் கொள்கிற, பல்வேறு அதிகார மையங்களால் ஆட்டுவிக்கப்படுகிற ஒரு முதல்வர் தமிழகத்திற்கு இனியும் தேவையில்லை என்ற முடிவுக்கு மக்கள் வந்து விட்டனர்.
இனியும் காலம் தாழ்த்தாது தமிழக மக்கள் நலன் கருதி, தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அதுதான் தமிழகத்திற்கும் இந்தியாவுக்கும் நல்லது என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications