ஜெ. வழக்கு: வருவான வரித்துறைக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
கடந்த 1993-94 நிதியாண்டில் சொத்து வரி கணக்கு காட்டாததால் சொத்துவரி சட்டம் 35பி பிரிவின்கீழ் என்மீது சென்னை வருமானவரித்துறை உதவி ஆணையர் புகார் செய்தார்.
இந்த வழக்கு, பொருளாதார குற்றங்களை விசாரிக்கும் எழும்பூர் கூடுதல் தலைமை மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கடந்த 1997ல் பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்படுகிறது.
பல்வேறு காரணங்களின் அடிப்படையில் இந்த வழக்கில் இருந்து என்னை விடுவிக்கும்படி கோரி விசாரணை கோர்ட்டில் மனு தாக்கல் செய்தேன். ஆனால் இந்த மனுவை கடந்த 2008 பிப்ரவரி 25ம் தேதியன்று நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
ஆனால் சொத்துவரி சட்டம் பிரிவு 14 அல்லது 17 (1)ன் படி வேண்டுமென்றே சொத்துக் கணக்கை காட்டாமல் மறைப்பவர்கள் மீதுதான் பிரிவு 35 பி-யின்கீழ் தண்டனைக்குரியதாகும்.
எனவே இந்த வழக்கில் இருந்து விடுவிக்க மறுத்து கீழ்கோர்ட் பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமாகும். இதனால் அந்த உத்தரவை ரத்து செய்து என்னை விடுவிக்க உத்தரவிடவேண்டும்.
இவ்வாறு ஜெயலலிதா குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதி எம்.வேணுகோபால் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதி வேணுகோபால் இது குறித்து 2 வாரங்களுக்குள் வருமானவரித்துறை பதில்மனு தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிட்டார்.
இந்த வழக்கு வரும் ஜூன் 9ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications