தபால் நிலையங்களில் ரயில், விமானம், பஸ் டிக்கெட் முன்பதிவு

தமிழ்நாடு வட்ட முதன்மை தலைமை அஞ்சல்துறை தலைவர் இந்திரா கிருஷ்ணகுமார், சென்னையில் நடந்த விழாவில் முதன்முதலாக ஒரு பயணிக்கு மும்பை- சென்னை விமான டிக்கெட்டை வழங்கி இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.
விழாவில் அவர் பேசியதாவது:
பொதுமக்கள் நலன் கருதி ஏ.ஆர்.எம்.ஐ. சொல்யூசன் என்ற தனியார் நிறுவனத்துடன் இணைந்து தபால் நிலையங்கள் மூலம் பயணச்சீட்டு முன்பதிவு செய்தல், உடனடியாக வழங்குதல் போன்ற வசதிகள் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
சென்னையில் உள்ள அண்ணாசாலை, தி.நகர், மயிலாப்பூர், தாம்பரம் தலைமை அஞ்சலகங்கள் உள்ளிட்ட முக்கியமான 37 தபால் நிலைங்கள் மற்றும் திருச்சி மண்டலத்தில் 10 தபால் அலுவலகங்களில் முதல்கட்டமாக இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
விரைவில் மதுரை, கோவை மண்டல தபால் அலுவலகங்களுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும். இதற்காக 250 ஊழியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என்றார்.
ஏ.ஆர்.எம்.ஐ. சொல்யூசன்ஸ் நிறுவன முதன்மை செயல் அலுவலர் சங்கரநாராயணன் கூறுகையில், இந்த திட்டத்தின் மூலம் உள்நாட்டு விமானப் போக்குவரத்து நிறுவனங்களான இந்தியன் ஏர்லைன்ஸ், ஏர் டெக்கான், கிங்பிஷர், பாரமௌண்ட், ஜெட் ஏர்வேஸ், ஸ்பைஸ் ஜெட் ஆகியவற்றின் டிக்கெட்டுகளும், தனியார் பஸ்களின் டிக்கெட்டுகளும் தற்போது வழங்கப்படுகின்றன.
விரைவில் அரசு போக்குவரத்துக் கழகத்துடன் பேசி அரசு பஸ்களின் டிக்கெட்டுகளும், தபால் அலுவலகங்களில் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications