எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டம்-ஈடுகட்ட புதிய வரி இல்லை- சிதம்பரம்
விலைவாசி உயர்வால் நெருக்கடியில் சிக்கியிருக்கும் மத்திய அரசுக்கு கச்சா எண்ணெய் விலை உயர்வு கடும் தலைவலியாக உருவெடுத்துள்ளது. பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் தற்போது மானிய விலையில் பெட்ரோல், டீசலை விற்றுவருவதால் ரூ.2 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நஷ்டத்தை ஈடுகட்ட பெட்ரோல், டீசல் விலையை உடனடியாக அதிகரிக்க வேண்டும். பெட்ரோல், டீசல் நுகர்வைக் கட்டுப்படுத்த ரேஷன் முறையை அறிமுகப்படுத்தவேண்டும். பெட்ரோல் மீதான சுங்க வரி மற்றும் உற்பத்தி வரியை ரத்து செய்யவேண்டும் என்று மத்திய அரசுக்கு பெட்ரோலியத்துறை அமைச்சகம் யோசனைகளை முன்வைத்துள்ளது.
இதுபற்றி பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தியோரா, அமைச்சர் சிதம்பரத்தை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், கச்சா எண்ணெய் விலை உயர்வால் அரசுத்துறை பெட்ரோலிய நிறுவனங்களுக்கு ஏற்படும் நஷ்டத்தைக் குறைக்க வருமான வரி மற்றும் கார்ப்பரேட் வரி மீது கூடுதல் வரி (சர்சார்ஜ்) விதிக்க அரசு பரிசீலித்து வருவதாக செய்திகள் வெளியாகின.
இதுபற்றி டெல்லியில் நிதி அமைச்சர் சிதம்பரம் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தியோரா என்னை சந்தித்தது வழக்கமான ஒன்றுதான். அதுபற்றி சில பத்திரிகைகளில் தவறான ஊகங்கள் வெளியாகியுள்ளதாக எனது கவனத்துக்கு வந்துள்ளது.
அந்த செய்திகள் முழுக்க ஊகத்தின் அடிப்படையில் வெளியாகியுள்ளன. குறிப்பாக புதிய வரிவிதிப்புகள் பற்றி வெளியாகியுள்ள தகவல்களில் எந்த முகாந்திரமும் இல்லை. நிதி அமைச்சகத்தில் இருந்து யாரும் பத்திரிகைக்கு இது போன்ற செய்திகளை அளிக்கவில்லை.
இவ்வாறு சிதம்பரம் அறிக்கையில் கூறியுள்ளார்.
இதனிடையில், பெட்ரோலியத்துறை அமைச்சக கூடுதல் செயலர் எஸ். சுந்தரேசன் கூறுகையில், எண்ணெய் நிறுவனங்களின் நஷ்டத்தை ஈடுகட்டுவதற்காக வருமான வரி செலுத்துவோர் மீது கூடுதல் செஸ் வரி விதிக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை. அதுபற்றிய பரிசீலனை எதுவும் நடக்கவில்லை என்றார்.