சஞ்சய்தத்-மான்யதா திருமணம் செல்லும்- கோர்ட் தீர்ப்பு
மும்பை: பாலிவுட் நடிகர் சஞ்சய்தத்- மான்யதா திருமணம் சட்டப்படி செல்லும் என மும்பை செஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்து இந்த விவகாரத்தில் ஏற்பட்ட பெரும் சர்ச்சைக்கு முடிவு கட்டியது.
கோவா நீதிமன்றத்தில் கடந்த பிப்ரவரி 7ம் தேதியன்று நடிகர் சஞ்சய்தத்தும், அவரது காதலி மான்யதாவும் திருமணத்தை பதிவு செய்தனர். ஆனால் இந்த திருமணம், முஸ்லிம் தனிநபர் சட்டத்துக்கு விரோதமானது என்ற சர்ச்சையை கிளப்பியது.
முஸ்லிம் சட்டப்படி, வேற்று மதத்தினரை விரும்பும் முஸ்லிம் பெண், அந்த மதத்துக்கு மாறி திருமணம் செய்து கொள்ளலாம். அல்லது வேற்று மதத்தவரை முஸ்லிமாக மாற்றியபின் அவருடன் திருமணம் செய்துகொள்ளலாம். மதமாற்றம் செய்யாமல் திருமணம் நடந்தால் அது செல்லாது என்று சட்ட வல்லுனர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது.
மேலும், பிறப்பால் முஸ்லிம் பெண்ணான மான்யதா, தனக்கு இந்து பெயரைச் சூட்டிக் கொண்டதைத் தவிர, அவர் வேற்று மதம் மாறியதற்கான சாட்சியங்கள் எதுவும் இல்லை என்றும் கூறி இந்த திருமணத்துக்கு எதிர்ப்பு கிளம்பியது.
இந்நிலையில் மான்யதாவின் முதல் கணவர் மீரஜ் உர் ரஹ்மான் தன்னிடம் முறையாக விவாகரத்து பெறாமலே இந்த திருமணம் நடந்திருப்பதால் அதை ரத்து செய்யவேண்டும் என்று வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த கீழ்கோர்ட்டு சஞ்சய்தத்- மான்யதா திருமணம் சட்டவிரோதம் என அறிவித்து ரத்து செய்து உத்தரவிட்டது.
இதை எதிர்த்து மும்பை செஷன்ஸ் கோர்ட்டில் சஞ்சய்தத்- மான்யதா அப்பீல் செய்தனர். இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய மும்பை செஷன்ஸ் நீதிபதி, கீழ் கோர்ட் உத்தரவை ரத்து செய்தார்.
மேலும், மான்யதா சட்டப்படி விவாகரத்து வாங்கியுள்ளதால் மறுதிருமணம் செய்து கொள்ள உரிமை இருக்கிறது. எனவே அவர்களது திருமணம் சட்டப்படி செல்லத்தக்கது என்று பரபரப்பு தீர்ப்பளித்தார்.












Click it and Unblock the Notifications