13 ஆண்டுக்கு பின் அடக்கம் செய்யப்பட்ட தீவிரவாதியின் உடல்
சென்னை: சென்னை இந்து முன்னணி அலுவலகத்தில் நடந்த குண்டு வெடிப்பில் பலியான தீவிரவாதி என்று கருதப்படுபவரின் உடல் 13 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று முன்தினம் இரவு அடக்கம் செய்யப்பட்டது. இந்த உடல் சிபிசிஐடி போலீசாரால் சென்னை அரசு பொது மருத்துவமனை சவக் கிடங்கில் வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் இந்து முன்னணியின் தலைமை அலுவலகத்தில் கடந்த 95ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பயங்கர குண்டுவெடிப்பு நடந்தது. இதில் 2 பேர் உடல் சிதறி பலியாயினர்.
பலியானவர்களில் ஒருவரது பெயர் பைபிள் சண்முகம் என்று தெரிய வந்தது. இன்னொருவர் உடல் அடையாளம் தெரியவில்லை. அவரை குண்டு வைத்த தீவிரவாதியாக இருக்கலாம் என்று கருதி விசாரணை நடந்தது.
இந் நிலையில் இவர் கன்னியாகுமரியை சேர்ந்த முஸ்தபா என்று போலீசார் கூறினர். ஆனால், முஸ்தபாவின் உறவினர்கள் அது முஸ்தபாவின் உடல் இல்லை என்று கூறிவிட்டனர்.
இதனால் பலியானவர் யார் என்று தெரியாமல் போலீசார் திணறி வந்தனர். சிபிசிஐடி போலீசார் பல ஆண்டுகள் விசாரித்தும் அடையாளம் காண முடியவில்லை.
அடையாளம் காணப்படாத அந்த நபரின் உடல் 13 ஆண்டுகளாக சென்னை அரசு பொது மருத்துவமனை சவக் கிடங்கில் வைக்கப்பட்டிருந்தது.
இறந்தவரின் உடலை அடையாளம் கண்டுபிடிக்க முடியாததால், இந்த வழக்கு விசாரணையும் ஸ்தம்பித்து போய் நின்றுவிட்டது. இந்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டாலும் இன்னும் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை.
இந் நிலையில் அடையாளம் தெரியாத உடலை இனிமேலும் பாதுகாத்து வைத்திருக்க தேவையில்லை என்றும், இதனால் வழக்கு விசாரணைக்கு பாதிப்பு இல்லை என்றும் சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர்.
இதையடுத்து 13 ஆண்டுகளாக அரசு பொதுமருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த உடல் நேற்று முன்தினம் இரவு மாநகராட்சி அதிகாரிகள் உதவியோடு அடக்கம் செய்யப்பட்டது.