மீண்டும் கோளாறு: டிரைவரால் தப்பிய 265 ஊட்டி ரயில் பயணிகள்
குன்னூர்: நடுக்காட்டில் மீண்டும் ஊட்டி மலை ரயிலில் கோளாறு ஏற்பட்டபோது டிரைவரின் சாமர்த்தியத்தால் 265 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு மலை ரயில் நேற்று மாலை 2.30 மணிக்கு புறப்பட்டு வந்தது. இந்த ரெயிலில் 265 பயணிகள் இருந்தனர். குன்னூர் ரயில் நிலையத்துக்கு மாலை 4 மணியளவில் இந்த மலைரயில் வந்தடைந்தது. கால்மணி நேரம் கழித்து மீண்டும் கிளம்பியது.
குன்னூரில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள காந்திபுரம் பகுதிக்கு வந்தபோது என்ஜினில் கோளாறு ஏற்பட்டதால் அதன் சக்கரங்கள் இயங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதை உடனடியாக அறிந்த என்ஜின் டிரைவர் சாமர்த்தியமாக பிரேக் போட்டு ரயிலை நிறுத்தினார்.
இதனால் ரயிலில் பயணம் செய்த 265 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். செங்குத்தான மலையில் இருந்து பள்ளமான பகுதிக்கு அப்போது ரயில் சென்று கொண்டிருந்தது. டிரைவர் திறமையாக பிரேக்' போட்டு ரயிலை நிறுத்தியிருக்காவிட்டால் பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும்.
இந்நிலையில் நடுக்காட்டில் ரயில் நின்றுவிட்டதால் பயணிகள் தவித்தனர். இது குறித்து குன்னூர் ரயில் நிலைய அதிகாரி சந்திரலிங்கத்துக்கு என்ஜின் டிரைவர் தகவல் கொடுத்தார்.
உடனே குன்னூர் ரெயில் நிலையத்தில் இருந்து 3 காலி பெட்டிகளுடன் மாற்று ரயில் அனுப்பப்பட்டது. அந்த ரயிலில் பயணிகளை ஏற்றி குன்னூர் ரயில் நிலையத்துக்கு கொண்டுவந்தனர். அங்கிருந்து பஸ்கள் மூலம் மேட்டுப்பாளையத்துக்கு ஏற்றிவிடப்பட்டனர்.
இதுபோன்று அடிக்கடி மலைரயில் கோளாறு ஏற்படுவதால் அதில் பயணம் செய்வதற்கு அச்சமாக இருப்பதாக பயணிகள் தெரிவித்தனர். இதுபோன்ற அசம்பாவிதங்களை தவிர்க்க ஐநா பாரம்பரியச் சின்னமாக விளங்கும் ஊட்டி மலை ரயி்ல் போக்குவரத்தை கவனத்துடன் பராமரிக்கவேண்டும் என்று அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு இதேபோன்று நடுவழியில் நின்ற மலை ரயில் என்ஜினை சரிசெய்ய சென்ற ரயில்வே ஊழியர்கள் டிராலி கவிழ்ந்து 3 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.