For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சபரிமலை: மகர விளக்கு செயற்கையாக ஏற்றப்படுவதாக சர்ச்சை- விசாரிக்க அரசு முடிவு

By Staff
Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: சபரிமலையில் மகர விளக்கு வெளிச்சம் தோன்றுவது குறித்து விசாரணை நடத்தப்படும் என கேரள முதல்வர் அச்சுதானந்தன் கூறியுள்ளார்.

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் பல லட்சம் பக்தர்கள் சென்று வருகின்றனர். தமிழகத்தில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து, விரதம் இருந்து ஐயப்பனை தரிசிப்பது வழக்கம்.

ஆண்டுதோறும் மகர சங்கராந்தி நாளன்று பொன்னம்பல மேட்டில் மகர விளக்கு 3 முறை தோன்றி மறையும். மகர விளக்கு தோன்றும்போது ஐயப்பனே காட்சி தருவதாக ஐதீகம். இந்த மகர ஜோதியை ஐயப்ப சுவாமியாகவே கருதி பக்தர்கள் வழிபடுவது வழக்கம்.

இந் நிலையில் ஐயப்பன் கோவில் தலைமை தந்திரியின் குடும்பத்தைச் சேர்ந்தவரும், திருவாங்கூர் தேவசம்போர்டு முன்னாள் தலைவருமான ராமன் நாயர், மகர விளக்கு என்பது இயற்கையாக தோன்றுவதே அல்ல. கோவில் ஊழியர்களால் செயற்கையாக ஏற்றப்படுகிறது என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

மேலும் கேரள சுற்றுலா மேம்பாட்டுத் துறை தலைவர் செரியன் பிலிப்பும் மகர ஜோதி என்பது பக்தர்களை ஏமாற்றும் ஒரு மோசடி செயல் என்றார்.

இந்தக் கருத்துக்களால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

இந் நிலையில் இந்தப் பிரச்சினை பற்றி ஐயப்பன் கோவில் தலைமை தந்திரி கண்டரரு மகேஸ்வரருவி்ன் பேரனான ராகுல் ஈஸ்வர் தந்திரி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,

மகர விளக்கு வேறு. மகர ஜோதி வேறு. மகர ஜோதி என்பது மகர சங்கராந்தி அன்று கிழக்கு திசையில் தோன்றும் நட்சத்திரத்தை குறிக்கும்.

மகர விளக்கு என்பது, பழங்காலத்தில் ஐயப்பனின் மூலஸ்தானமாக இருந்த பொன்னம்பல மேட்டில் ஏற்றப்படுவதாகும். மகர விளக்கு ஏற்றும் இந்த வழக்கம், பரசுராம முனிவரால் தொடங்கி வைக்கப்பட்டது. அதனை நினைவூட்டும் விதமாகத்தான் இப்போது அங்கு விளக்கு ஏற்றப்படுகிறது. காடுகளில் வசித்த பழங்குடி மக்களால், இந்த வழக்கம் பல நூற்றாண்டுகாலமாக கடைபிடிக்கப்பட்டு வந்தது.

மகர ஜோதியும், மகர விளக்கும் ஒன்று என்று நினைக்கும் ஒரு சிலரின் தவறான கருத்து காரணமாக இந்த சர்ச்சை எழுந்துள்ளது. இது தேவையில்லாதது. இந்த இரண்டு விஷயங்களையும் வேறுபடுத்தி பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந் நிலையில் கேரள அறநிலையத்துறை அமைச்சர் சுதாகரன் கூறுகையில், மகர விளக்கு மனிதர்களால் ஏற்றப்படுகிறது என்பது அரசுக்குத் தெரியும். மகர விளக்கு ஏற்றப்படும் பகுதிக்கு செல்வதென்பது மிகவும் கடினம். இஸ்லாமிய மக்கள் சந்திரனின் பிறைவடிவை பார்த்து, விழாவை தீர்மானிப்பது போலான ஒரு நிகழ்வுதான் இது. நம்பிக்கை உள்ளவர்களின் நம்பிக்கையில் கைவைக்கும் நோக்கம் அரசுக்கு இல்லை. இதை சொல்வதால் எனது முற்போக்கு சிந்தனைக்கு எந்த குறையும் ஏற்படாது என்றார்.

விசாரணை நடத்தப்படும்- முதல்வர்

இந் நிலையில் கேரள முதல்வர் அச்சுதானந்தன் நிருபர்களிடம் பேசுகையில்,

சபரிமலையில் மகர விளக்கு வெளிச்சம் எப்படி உருவாகிறது என்று கண்டறிய விசாரணை நடத்தப்படும். இப்பிரச்சினையில் பக்தர்களின் நம்பிக்கைக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்தில் அரசு நடந்து கொள்ளாது என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X