எதியூரப்பா பதவியேற்றார்-5 சுயேச்சைகளுக்கு அமைச்சர் பதவி
முதலில் வராமல் கடைசியாக ஆதரவு தெரிவித்த சுயேச்சையான ஒரத்தூர் பிரகாஷுக்கு மட்டும் அமைச்சர் பதவி தரப்படவில்லை.
கர்நாடகத்தின் முதல் பாஜக முதல்வராக இன்று பகல் 2 மணிக்கு எதியூரப்பா பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் ராமேஸ்வர் தாக்கூர் பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
இதைத் தொடர்ந்து 29 அமைச்சர்களும் பதவியேற்றனர். இதில் 5 சுயேச்சைகளும் அடக்கம். இந்த 29 பேருமே கேபினட் அமைச்சர்களாவர்.
விதான செளதா முன் நடந்த பிரமாண்ட நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பாஜக தொண்டர்கள் முன் எதியூரப்பா பதவியேற்றுக் கொண்டார்.
இந் நிகழ்ச்சியில் பாஜக தலைவர் அத்வான், வெங்கையா நாயுடு, கோபிநாத் முன்டே, அருண் ஜேட்லி, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந் நிலையில் எதியூரப்பாவுக்கு தமிழக முதல்வர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்து பேக்ஸ் அனுப்பியுள்ளார். அதில், கர்நாடக முதல்வராக பதவி ஏற்கும் உங்களுக்கு எனது உளமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். சீரிய முறையிலும் மகிழ்ச்சியுடனும் நீங்கள் பணியாற்றிட வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.