தலித் மக்களுக்கு இலவச அறுவை சிகிச்சை
சென்னை: அம்பேத்கார் மருத்துவ உதவி திட்டத்தின் கீழ் தாழ்த்தப்பட்ட, பழங்குடி இன மக்களுக்கு இலவசமாக அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகின்றன.
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சமூக நீதி மற்றும் நிர்வாக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சுயாட்சி பெற்ற அமைப்பு டாக்டர் அம்பேத்கார் ஸ்தாபனம். இந்த அமைப்பின் முலம் கடந்த 2004ம் ஆண்டு ஜனவரி முதல் சோதனை முறையில் சில மாநிலங்களில் 10 தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவமனைகளில் 'டாக்டர் அம்பேத்கார் மருத்துவ உதவி திட்டம்' செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின்படி தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களில் ஆண்டு வருமானம் ரூ.50,000 குறைவாக உள்ளோர் சிறுநீரகம், கல்லீரல், மூளை, இருதயம் குறித்த நோய்களுக்கு அறுவை சிகிச்சை மற்றும் மூட்டு அறுவை சிகிச்சை, தண்டுவட அறுவை சிகிச்சையை செய்து கொள்ளலாம்.
இத்திட்டம் மத்திய, மாநில மற்றும் சில தனியார் மருத்துவமனைகளில் செயல்படுத்தப்படுகிறது.
விண்ணப்பதாரர் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தை சார்ந்தவராகயிருத்தல் வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.50,000க்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.