பெங்களூரில் தமிழ் படக் குழு மீது கன்னட அமைப்பு தாக்குதல்
பெங்களூரில் படப்பிடிப்பு நடத்திய 'ஏன் இப்படி மயக்கினாய்' படக் குழுவினர் மீது கன்னட ரக்ஷன வேதிக அமைப்பைச் சேர்ந்தவர்கள் பெரும் தாக்குதல் நடத்தினர். இதில் பலர் காயமடைந்தனர்.கர்நாடகத்தில் படப்பிடிப்புக்குச் செல்லும் தமிழ்ப் படக் குழுவினர் அவ்வப்போது தாக்கப்படுவது வழக்கமாகி வருகிறது. முன்பு சரத்குமாரின் சமுத்திரம் படக் குழுவினர் கொலை வெறித் தாக்குதலுக்கு ஆளாகினர்.
இந் நிலையில் 'ஏன் இப்படி மயக்கினாய்' என்ற படத்தின் யூனிட்டார் மீது கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
'சில்லுன்னு ஒரு காதல்' படத்தை இயக்கியவர் கிருஷ்ணா. இவர்தான் தற்போது ஏன் இப்படி மயக்கினாய் என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் நாயகனாக அஜீத்தின் மனைவி ஷாலினியின் சகோதரர் ரிச்சர்ட், நாயகியாக கீரத் பட்டல் ஆகியோர் நடிக்கின்றனர்.
இப்படத்தின் ஷூட்டிங் பெங்களூர் பிரேசர் டவுன் பகுதியில் நடந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பலத்த போலீஸ் பாதுகாப்பும் கொடுக்கப்பட்டிருந்தது.
இந் நிலையில் கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பைச் சேர்ந்தவர்கள் பெரும் கும்பலாக அங்கு வந்தனர். போலீஸ் பாதுகாப்பை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்த அவர்கள், படக்குழுவினர் மீது கொலை வெறித் தாக்குதலை நடத்தினர். இங்கு படப்பிடிப்பு நடத்தக் கூடாது என்றும் கோஷமிட்டனர்.
இந்த தாக்குதலில் இயக்குநர் கிருஷ்ணாவும், அவரது உதவியாளர்கள் இருவரும் காயமடைந்தனர். உடனடியாக ஷூட்டிங் ரத்து செய்யப்பட்டது. போலீஸ் பாதுகாப்புடன் படக்குழுவினர் பெங்களூரை விட்டு கிளம்பி சென்னை வந்து சேர்ந்தனர்.
ஓகேனக்கல் திட்டத்தை எதிர்ப்பதில் தீவிரமாக உள்ள பாஜக அரசு கர்நாடகத்தில் பதவியேற்றுள்ள நிலையில் கன்னட அமைப்பினர் தமிழ்ப் படக் குழுவினர் மீது தாக்குதல் நடத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.