நாளை முதல் ஹோட்டல்களில் இட்லி, வடை விலை குறைப்பு
சென்னை: தமிழகத்தில் ஹோட்டல்களில் நாளை முதல் உணவுப் பண்டங்களின் விலை குறைப்பு அமல்படுத்தப்படவுள்ளது என்று மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி தெரிவித்துள்ளார்.
ஹோட்டல்களில் இட்லி, வடை, பொங்கல், பூரி, டீ, காபி உள்ளிட்டவற்றின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. டீ, காபி போன்றவற்றின் விலை 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இதனால் ஹோட்டல்களுக்குப் போய் சாப்பிடவே பொதுமக்கள் அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து ஹோட்டல் அதிபர்கள் சங்க நிர்வாகிகளை இருமுறை அழைத்து அரசு பேச்சு நடத்தியது. இதில் 10 சதவீத அளவுக்கு விலைக் குறைப்பு செய்ய ஹோட்டல் அதிபர்கள் ஒத்துக் கொண்டனர். இருப்பினும் கூடுதலாக விலைக் குறைப்பு செய்ய வேண்டும் என அரசு வலியுறுத்தி வருகிறது.
இந்த நிலையில், சென்னையில் நடந்த முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் ரத்ததான முகாமில் கலந்து கொண்ட மின்சாரத் துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி உணவுப் பண்டங்களின் விலைக்குறைப்பு குறித்துக் கூறுகையில், ஹோட்டல்களில் உணவுப் பண்டங்களின் விலையை 10 சதவீத அளவுக்கு குறைப்பதாக ஹோட்டல் அதிபர்கள் கூறியுள்ளனர். ஆனால் குறைந்தது 20 சதவீதமாவது குறைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம்.
இன்று மாலை புதிய விலைப் பட்டியலுடன் வருவதாக ஹோட்டல் அதிபர்கள் சங்கம் உறுதியளித்துள்ளது. இந்த விலைக் குறைப்பு முதல்வரின் பிறந்த நாளான நாளை முதல் அமலுக்கு வரும் என்றார் அவர்.
இதன் மூலம் இட்லி, வடை, பொங்கல் உள்ளிட்ட பொருட்களின் விலை கணிசமாக குறையக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications