நளினி மனுவுக்கு எதிராக வழக்கு: சுவாமி
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் சுவாமி பேசினார். அப்போது அவர் கூறுகையில், சேதுசமுத்திர திட்ட பிரச்சனையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்று மாற்று பாதை அமைப்பது குறித்து பரிசீலிக்குமாறு பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளேன்.
மேலும் ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிப்பது குறித்து ஆய்வு செய்யுமாறும் கோரிக்கை விடுத்துள்ளேன்.
சேதுசமுத்திர திட்ட பிரச்சனையில் தமிழக முதலமைச்சர் கருணாநிதி முதலைக்கண்ணீர் வடித்து கவிதை எழுதுகிறார்.
இந்தப் பிரச்சனையில் அவர் தோல்வியை ஒப்புக் கொள்ள வேண்டும். சேது திட்ட பிரச்சனையில் உண்மையிலேயே கருணாநிதி வருத்தத்தில் இருந்தால் ஏன் பல கோடி ரூபாய் செலவு செய்து பிறந்தநாள் கொண்டாட வேண்டும்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் உள்ள நளினி, சோனியாவின் மகள் பிரியங்கா தன்னை சந்தித்த பின்னர் தம்மை விடுதலை செய்யக் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் நளினி பெண் என்பதாலோ, ஒரு குழந்தைக்கு தாய் என்பதாலோ அவருக்கு கருணை காட்டக்கூடாது என்று தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
ஆனால் அவருக்கு அளிக்கப்பட்ட மரண தண்டனை சட்டவிரோதமாக ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது.
தற்போது விடுதலை கோரி நளினி தாக்கல் செய்துள்ள மனுவில் அரசு தரப்பில் நியாயமான முறையில் விவாதம் நடைபெறாது என்பதால் இதில் என்னையும் சேர்க்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளேன்.
பூங்கோதையை தொடர்ந்து கருணாநிதி உள்ளிட்ட 20 அமைச்சர்களின் முறைகேடுகள் தொடர்பான ஆதார சிடிக்கள் என்னிடம் உள்ளன. ஆனால் அவற்றை எனக்கு அளித்த அதிகாரிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அவற்றை உரிய நேரத்தில் வெளியிடுவேன்.
இந்திய - சீன உறவு குறித்த கருத்தரங்கு ஒன்றில் உரையாற்ற வருமாறு சீன அரசு எனக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதற்காக வரும் 11ம் தேதி சீனா செல்கிறேன்.
மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத் தின் தவறான கொள்கைகள் காரண மாகவே விலைவாசி உயர்ந்துள்ளன. விலைவாசி குறைய வேண்டும் என்றால் சிதம்பரம் உடனடியாக பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும்.
பெட்ரோல் விலையை உயர்த்தாமல் அவற்றின் மீதான வரி மற்றும் சுங்கத் தீர்வையை அரசு குறைக்க வேண்டும். இதன் மூலம் பெட்ரோல் விலை பாதியாக குறைக்க இயலும் என்றார் சுவாமி.