For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தனியார் துறையிலும் இடஒதுக்கீடு-திமுக பொதுக் குழு தீர்மானம்

By Staff
Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: இட ஒதுக்கீட்டின் அளவை மாநில அரசுகளே நிர்ணயிக்கும் வகையில் அரசியல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என மத்திய அரசுக்கு திமுக பொதுக் குழு கோரிக்கை விடுத்துள்ளது.

அதே போல தனியார் துறையிலும் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த மத்திய அரசு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் திமுக கோரியுள்ளது.

இன்று முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்த திமுக பொதுக் குழுவில் இட ஒதுக்கீடு தொடர்பாக நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மான விவரம்:

கல்வியில் பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினருக்கு 69 சதவீத இட ஒதுக்கீட்டை தமிழக அரசு கொண்டு வந்தது. ஆனால், இட ஒதுக்கீட்டின் அளவு 50 சதவீதத்தைத் தாண்டக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து 69 இட ஒதுக்கீட்டை பாதுகாக்க மாநில அரசு தனி சட்டம் கொண்டு வந்து ஜனாதிபதியின் ஒப்புதலைப் பெற்றது. ஆனால், அதற்கும் உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துவிட்டது.

இதனால் ஆண்டுதோறும் பிற்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி இன மாணவர்களின் நலனைக் காக்க உச்ச நீதிமன்றத்தை அணுகி அனுமதி பெற வேண்டிய நிலையில் தமிழக அரசு உள்ளது.

இதனால் இட ஒதுக்கீட்டின் அளவை அந்தந்த மாநிலங்களே நிர்ணயிக்கும் வகையில் மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என திமுக நெடுங்காலமாக கோரி வருகிறது.

இதை செயல்படுத்தும் வகையில் அரசியல் சட்டத்தின் திருத்தம் கொண்டு வர வேண்டும் என மத்திய அரசை இந்த பொதுக் குழு வலியுத்துகிறது.

கிரீமி லேயரை நீக்க வேண்டும்:

மத்தியில் அமைந்துள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, மத்திய அரசின் உயர்கல்வி நிலையங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டிற்கான சட்டத்தை நிறைவேற்றியதையும்; அந்த சட்டத்தின் செல்லத்தக்க தன்மையினை இந்திய உச்சநீதிமன்றத்தின் அரசியல் சட்ட பெஞ்ச் ஏற்றுக் கொண்டு வழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பினையும்; இந்தப் பொதுக் குழு மனமார வரவேற்று, பாராட்டு தெரிவித்துக் கொள்கிறது.

உச்ச நீதின்றத்தின் தீர்ப்பில் 27 சதவீத இட ஒதுக்கீட்டிலிருந்து பிற்படுத்தப்பட்டோர்களில் பொருளாதாரரீதியாக முன்னேறிய பிரிவினரை (கிரீமி லேயர்) விலக்கிவிட வேண்டுமென்று தெரிவித்திருப்பது உறுத்தலாக அமைந்துவிட்டது.

திமுகவைப் பொறுத்த வரை தொடக்கத்திலிருந்தே இடஒதுக்கீட்டுக்குள் பொருளாதார அளவுகோலைத் திணிப்பதையோ, பிற்படுத்தப்பட்டோருள் பொருளாதாரரீதியாக முன்னேறிய பிரிவினரை இட ஒதுக்கீட்டிலிருந்து விலக்கி வைப்பதையோ ஏற்றுக் கொண்டதில்லை.

இடஒதுக்கீடு என்பது ஏழ்மையைப் போக்குவதற்கான கருவி அல்ல. பல நூற்றாண்டுகளாக உரிய வாய்ப்புகள் மறுக்கப்பட்ட- சமூகரீதியாகவும், கல்வி நிலையிலும்- பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்க்கு அரசியல் சட்டம் வழங்கிய உரிமையே இடஒதுக்கீடு என்பதாகும்.

எனவே, பிற்படுத்தப்பட்டவர்களில் பொருளாதாரரீதியாக முன்னேறிய பிரிவினரை இடஒதுக்கீட்டிலிருந்து விலக்கி வைத்திட வேண்டும் என்ற அம்சத்தை நீக்கி, பிற்படுத்தப்பட்டோர் அனைவரும் பாகுபாடின்றி இடஒதுக்கீட்டின் பலன்களை அனுபவிப்பதற்கு சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டு மென்று மத்திய அரசை இந்தப் பொதுக் குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு:

அதே போல தனியார் துறையிலும் இட ஒதுக்கீட்டை அமல்படுத்தும் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். தனியார் துறையிலும் இட ஒதுக்கீட்டை அமல்படுத்தாமல் சமூக நீதியை முழுமையாக எட்ட முடியாது.

சிறுபான்மையினர் இட ஒதுக்கீடு:

சிறுபான்மை மக்களின் நலனில் எப்போதும் மிகுந்த அக்கறை கொண்ட திமுக, முனைப்போடு செயல்பட்டு, தமிழகத்தல் 2007ம் ஆண்டிலிருந்து இஸ்லாமிய மக்களுக்கு 3.5 விழுக்காடும், கிருஸ்தவர்களுக்கு 3.5 விழுக்காடும் இடஒதுக்கீடு அளித்து சமூக நீதியை வழங்கியுள்ளது.

சிறுபான்மையினருக்கு இந்தியாவில் கல்வி, வேலை வாய்ப்புகளில் இடஒதுக் கீடு அளிக்கும் வகையில் உரிய அரசமைப்புச் சட்டத் திருத்தத்தினை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசை இந்தப் பொதுக் குழு கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X