காங்கிரசில் ராஜசேகர்-ஜீவிதா!
தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் ராஜசேகர் தமிழில் நடிக்க ஆரம்பித்து இப்போது ஆந்திராவில் பிரபலமாக உள்ள அதிரடி நாயகன். இவரும், நடிகை ஜீவிதாவும் காதலித்து மணந்து கொண்டனர்.
சமீபத்தில் நடிகர் சிரஞ்சீவியின் புதிய கட்சி குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு ராஜசேகர் அளித்த பதிலால் அதிருப்தி அடைந்த சிரஞ்சீவி ரசிகர்கள், ராஜசேகர், ஜீவிதா மற்றும் குழந்தைகள் வந்த காரை அடித்து நொறுக்கி ரகளை செய்தனர். இதில் குழந்தைகளுக்கு தலையில், காயம் ஏற்பட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த சிரஞ்சீவி, ராஜசேகரின் வீட்டுக்குச் சென்று அவரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். வருத்தமும் தெரிவித்தார்.
தற்போது சிரஞ்சீவி தனது புதிய கட்சி தொடர்பான பணிகளில் தீவிரமாக உள்ளார். அதேசமயம், நடிகர் ராஜசேகர், மனைவி ஜீவிதாவுடன் காங்கிரஸில் இணையத் திட்டமிட்டுள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் ராஜசேகர ரெட்டியை ராஜசேகரும், ஜீவிதாவும் சந்தித்துப் பேசினர். அப்போது தெலுங்கானா பகுதியில் நடந்த இடைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதற்கு இருவரும் முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் ராஜசேகர் பேசுகையில், நான் மறைந்த என்.டி.ஆர். மீது மிகுந்த பாசம் கொண்டவன், மரியாதை கொண்டவன். இதன் காரணமாக தெலுங்கு தேசம் கட்சிக்காகப் பிரசாரம் செய்துள்ளேன்.
இருப்பினும் கட்சி என்ற முறையில், எனக்கு காங்கிரஸைப் பிடிக்கும். நான் விரைவில் காங்கிரஸில் சேரவுள்ளேன். அப்போது அது அனைவருக்கும் புரியும் என்றார்.
சிரஞ்சீவியின் அரசியல் பிரவேசத்தால் பீதியடைந்துள்ள காங்கிரஸ் கட்சி, ராஜசேகர் - ஜீவிதாவை வைத்து சமாளிக்க முயற்சிக்கும் என்று தெரிகிறது.













Click it and Unblock the Notifications