கர்நாடக சட்டசபையில் உரையாற்ற ஆளுநர் சம்மதம்
பெங்களூர்: கர்நாடக சட்டமன்றம்-சட்டமேலவையின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்ற ஆளுநர் ராமேஷ்வர் தாக்கூர் ஒப்புக் கொண்டுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்தில் அல்லது புதிய அரசு பதவி ஏற்கும்போது சட்டபை கூடும் முதல் கூட்டத்தில் ஆளுநர் உரை நிகழ்த்துவது வழக்கம்.
கர்நாடகத்தில் சட்ட மேலவையும் உள்ளதால் புதிய அரசின் முதல் கூட்டம் சட்டசபை-மேலவையின் கூட்டுக் கூட்டமாக நடத்தப்பட்டு ஆளுநர் உரையாற்றுவது வழக்கம்.
அந்த வகையில் எதியூரப்பா தலைமையிலான பாஜக அரசு பதவியேற்றதைத் தொடர்ந்து நாளை (4ம் தேதி) சட்டசபை கூடுகிறது. 5ம் தேதி சபாநாயகர் தேர்வு நடக்கிறது. 6ம் தேதி அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது.
இந் நிலையில் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்ற வருமாறு கவர்னர் ராமேசுவர் தாகூருக்கு முதல்வர் எதியூரப்பா கோரிக்கை விடுத்தார்.
ஆனால், அதை கவர்னர் நிராகரித்து விட்டார். இது குறித்து ராமேசுவர் தாகூர் கூறுகையில், பாஜக அரசு முழு பலத்துடன் பதவி ஏற்கவில்லை. சுயேச்சைகளின் ஆதரவுடன் தான பதவிக்கு வந்துள்ளது. இதனால் முதலில் சட்டசபையில் அரசு தனது மெஜாரிட்டியை அரசு நிரூபிக்க வேண்டும். அதன்பிறகு தான் சட்டசபையில் உரை நிகழ்த்த முடியும் என்றார்.
கவர்னரின் இந்த செயலுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்தது.
இந் நிலையில் அமைச்சர் சுரேஷ் குமார், அட்வகேட் ஜெனரல் உதய் ஹொல்லா ஆகியோருடன் இன்று மீண்டும் ஆளுநரை சந்தித்தார் எதியூரப்பா. அப்போது அவரை மீண்டும் உரையாற்ற வருமாறு எதியூரப்பா அழைத்தார்.
இதையடுத்து முதல்வரின் கோரிக்கையை ஏற்ற ஆளுநர் 6ம் தேதி உரையாற்ற ஒப்புக் கொண்டுவிட்டார்.
சபாநாயகராக ஷெட்டார் சம்மதம்?:
இதற்கிடையே அமைச்சர் பதவி தான் வேண்டும் என்று கூறி சபாநாயகர் பதவியை ஏற்க மறுத்து வந்த மூத்த பாஜக தலைவர் ஜெகதீஷ் ஷெட்டார், அந்தப் பதவியை ஏற்க முன் வந்துவிட்டதாகத் தெரிகிறது.
தன்னை தீவிரமாக எதிர்க்கும் ஷெட்டாரை அமைச்சராக எதியூரப்பா மறுத்துவிட்டார். அவரை சபாநாயகராக்கி அரசியல்ரீதியில் முடக்க திட்டமிட்டார். ஆனால், சபாநாயகர் பதவி வேண்டும், உள்துறை அமைச்சர் பதவி வேண்டும் என்று ஷெட்டார் கூறி வந்தார்.
இதையடுத்து பாஜக மத்தியத் தலைமை தலையிட்டு ஷெட்டாரை டெல்லிக்கு அழைத்துப் பேசியது. அதில் சபாநாயகர் பதவியை ஏற்க அவர் ஒப்புக் கொண்டுவிட்டதாகத் தெரிகிறது.