சென்னை மீனவர்களை கடத்திச் சென்ற ஆந்திர மீனவர்கள்
சென்னை: சென்னையைச் சேர்ந்த 100 மீனவர்களையும் அவர்கள் பயணித்த 16 பைபர் கிளாஸ் படகுகளையும் ஆந்திர மீனவர்கள் கடத்திச் சென்று விட்னர். இதனால் காசிமேட்டில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
தென் மாவட்ட மீனவர்களுக்கு இலங்கை கடற்படை எமன் என்றார், சென்னை, திருவள்ளூர் மாவட்ட மீனவர்களுக்கு ஆந்திர மீனவர்கள்தான் எதிரி.
அடிக்கடி சென்னை மீனவர்களை கடத்திச் சென்று, பணம் வாங்கிக் கொண்டு விடுவது அவர்களின் வழக்கமாகி விட்டது. இந்த அட்டகாசத்திற்கு இதுவரை முடிவே இல்லை.
இந்த நிலையில், காசிமேட்டைச் சேர்ந்த 100 மீனவர்கள் 16 பைபர் கிளாஸ் படகுகளில் மீன் பிடிக்கச் சென்றனர். நெல்லூர் அருகே அவர்கள் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு ஆந்திர மீனவர்கள் விரைந்து வந்து அனைவரையும் சுற்றி வளைத்தனர்.
பின்னர் தமிழக மீனவர்களை தங்களது பகுதிக்கு கடத்திச் சென்றனர். படகுகளையும் கடத்திச் சென்று விட்டனர். இதனால் காசி மேடு பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.
இந்தக் கடத்தல் குறித்து மாநில மீன்வளத்துறை அமைச்சர் சாமியிடம் மீனவர்கள் சங்கம் சார்பில் புகார் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து சாமி கூறுகையில், மீனவர்களை பத்திரமாக மீட்டு சென்னைக்குக் கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
அதேசமயம், காசிமேடு மீனவர் சங்கத்தின் பிரதிநிதிகள் குழுவும் ஆந்திரா சென்றுள்ளது.












Click it and Unblock the Notifications