Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை- யுஎஸ் பெண்ணின் கற்பழிப்பு புகார்-2 பேர் சரண்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை நட்சத்திர ஹோட்டலில் கணவருடன் பார்ட்டிக்குச் சென்ற அமெரிக்காவைச் சேர்ந்த பெண்ணைக் கற்பழித்ததாக கூறப்படும் வழக்கில் தேடப்பட்டு வந்த இருவர் தேனாம்பேட்டை போலீஸில் சரணடைந்தனர்.

அமெரிக்காவைச் சேர்ந்தவர் ஆண்ட்ரூ பெக்கர். 28 வயதாகும் இவர் சாப்ட்வேர் என்ஜீனியர் ஆவார். சென்னையில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கெல்லி பெக்கர். இவர் கோட்டூர்புரத்தில் உள்ள ஒரு பள்ளியில் ஆங்கில ஆசிரியையாக உள்ளார். இருவரும் ஆழ்வார்ப்பேட்டை டிடிகே சாலையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருகின்றனர்.

கணவனும், மனைவியும் அருகில் உள்ள அடையார் கேட் ஹோட்டலுக்குச் சென்று தினசரி மது அருந்துவது வழக்கம். கடந்த 24ம் தேதியும் அவர்கள் மது அருந்தச் சென்றனர். அப்போது ஒரு பெண் நிருபரும் உடன் வந்துள்ளார்.

3 பேரும் மது அருந்தியுள்ளனர். இந்த நிலையில் முன்கூட்டியே பெக்கர் வீட்டுக்குக் கிளம்பினார். தான் மெதுவாக வருவதாக கூறி தொடர்ந்து மது அருந்தியுள்ளார் கெல்லி.

பின்னர் பெண் நிருபரும், கெல்லியும் தொடர்ந்து மது அருந்தியுள்ளனர். இந்த நிலையில் அதிகாலை வரை கெல்லி வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெக்கர் பல இடங்களிலும் தேடிப் பார்த்தார்.

இந்தப் பின்னணியில், அண்ணா நகர் சாந்தி காலனி பகுதியில் சாலையோரமாக கெல்லி பெக்கர் மயங்கிய நிலையில் கிடந்தார். அவரைப் பார்த்த இரு பிபிஓ ஊழியர்கள், கெல்லியை மீட்டு அவரது வீட்டில் டிராப் செய்து விட்டு போய் விட்டனர்.

இதையடுத்து 28ம் தேதி தேனாம்பேட்டை போலீஸில் புகார் கொடுத்தார் கெல்லி. அதில், ஜாய் மாத்யூ, ஷாஜி ஜான் ஆகியோருடன் தான் இன்னொரு ஹோட்டலுக்கு மது அருந்தச் சென்றதாகவும், அதன் பின்னர்
தனக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை. எனது கைப்பை, செல்போன் போன்றவையும் காணவில்லை என்று புகாரில் கூறியிருந்தார்.

இருப்பினும் கெல்லி போலீஸாரிடம் வருவதற்கு முன்பு அப்பல்லோ மருத்துவமனைக்குச் சென்றிருந்தார். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், கெல்லி பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர். ஆனால் தனது புகாரில், தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கலாமோ என்று சந்தேகப்படுவதாக கெல்லி கூறியிருந்தார்.

இந்த வழக்கில் பல்வேறு குழப்பமான, முரண்பாடான தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வந்ததால் போலீஸார் குழப்பமடைந்தனர். இந்த நிலையில் தலைமறைவாகி விட்ட மாத்யூ மற்றும் ஷாஜி ஜானை போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்தச் சூழ்நிலையில் நேற்று தேனாம்பேட்டை போலீஸில் இருவரும் சரணடைந்தனர். இவர்களில் மாத்யூ தொழிலதிபர் ஆவார். கேரளாவைச் சேர்ந்தவர். ஷாஜி ஜான் அண்ணாநகரைச் சேர்ந்தவர். திருமணமாகாத இவர், எலக்ட்ரிகல் கடை வைத்துள்ளார். இருவரும் நெருங்கிய நண்பர்கள். அடையார் கேட் ஹோட்டலுக்கு மது அருந்தச் செல்வது வாடிக்கை.

அப்போதுதான் கெல்லியுடன் அவர்களுக்கு நட்பு ஏற்பட்டுள்ளது. அந்த பழக்கத்தில்தான் அவர்களுடன் கெல்லி மது அருந்தியுள்ளார்.

போலீஸாரிடம் மாத்யூ கொடுத்த வாக்குமூலத்தில், எனது பூர்வீகம் கேரளா. இருப்பினும் தந்தை மேத்யூ சென்னையில் தொழில் அதிபராக வாழ்ந்தார். அம்பத்தூரில் பேட்டரி தயாரிக்கும் நிறுவனம் நடத்தினார். நான் சென்னையில் உள்ள பிரபல கான்வென்ட் பள்ளியில் படித்தேன். அதன்பிறகு நுங்கம்பாக்கம் கல்லூரி ஒன்றில் பி.காம். பட்டப்படிப்பு படித்தேன். அமெரிக்காவில் எம்.பி.ஏ. படித்துக்கொண்டிருக்கும்போது எனது தந்தை இறந்துவிட்டார்.

இதனால் படிப்பை பாதியில் முடித்துவிட்டு, எனது தந்தையின் கம்பெனியை பார்க்க ஆரம்பித்தேன். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் அதை மூடிவிட்டு ரியல் எஸ்டேட் தொழில் செய்ய ஆரம்பித்தேன். எனது மனைவி பெயர் ஆனி ஜோஸ், 3 வயதில் பெண் குழந்தை உள்ளது.

எனது மனைவி கோடை விடுமுறையில் பெங்களூர் போய்விட்டார். தனியாக இருந்த நான் ஆழ்வார்பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு தினமும் நண்பர் ஷாஜியுடன் சென்று மது அருந்துவேன். அதுபோல் கடந்த 24-ந் தேதி அன்று இரவும் மது அருந்தியபோது வெளிநாட்டு பெண்ணான கெல்லி போதையில் உற்சாகமாக டிஸ்கோ ஆடிக் கொண்டிருந்தார்.

என்னை, அவருடன் நடனம் ஆட அழைத்தார். நானும் அவருடன் சேர்ந்து நடனம் ஆடினேன். நள்ளிரவு 2 மணியளவில் போதை தெளிந்துவிட்டதால் மீண்டும் மது வாங்கி தரும்படி கெல்லி, என்னிடம் கேட்டார். நானும் மது வாங்கி கொடுத்தேன். அதன்பிறகு நான் வீட்டுக்கு புறப்பட்டபோது, கெல்லி என்னோடு வருவதாக கூறினார்.

எனது வீடு அண்ணாநகரில் உள்ளது என்று கூறினேன். எனது வீடும் அண்ணாநகரில் தான் இருக்கிறது, காரில் கொண்டு போய் விடுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து டாக்சி ஒன்றை வாடகைக்கு எடுத்துக்கொண்டு கெல்லியை, என்னோடு அழைத்து சென்றேன். நண்பர் ஷாஜியும் எங்களோடு காரில் வந்தார். நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரி அருகே வரும்போது கெல்லி வாந்தி எடுத்தார். உடனே காரை நிறுத்தினோம். ஹெல்லியை காரைவிட்டு இறக்கும்போது கீழே விழுந்து அவருக்கு காலிலும், கையிலும் காயம் ஏற்பட்டது.

அப்போது அங்கு ரோந்து போலீசார் வந்தனர். அவர்கள் எங்களிடம் விசாரித்தார்கள். கெல்லி போதையில் இருப்பதாகவும், அவரை வீட்டில் கொண்டு போய் விடப்போவதாகவும் கூறினேன். அதன்பிறகு கெல்லியை காரில் அழைத்து சென்றேன்.

அண்ணாநகர் சாந்தி காலனி அருகே செல்லும்போது அந்த பகுதியில் தான் தனது வீடு இருப்பதாக கெல்லி கூறினார். இதனால் அவரை அங்கே இறக்கிவிட்டு, நானும், ஷாஜியும் காரில் வந்துவிட்டோம். அதன்பிறகு சாஜி தனியாக ஐ.சி.எப்.பில் உள்ள அவரது வீட்டுக்கு போய்விட்டார். கெல்லி இறங்கும்போது அவரது செல்போனையும், காமிராவையும் காரிலேயே விட்டு சென்றார். அதை நான் எடுத்து வைத்துக்கொண்டேன்.

இதற்கிடையில், பத்திரிகைகளில் என்னைப்பற்றி வந்த செய்திகளை பார்த்ததும் போலீசார் என்னை பிடித்துவிடுவார்கள் என்று பயந்து தப்பி ஓடிவிட்டேன். கெல்லியிடம் செக்ஸ் உறவு எதுவும் நான் வைக்கவில்லை. அவரை நான் பலாத்காரம் செய்யவில்லை என்று கூறியுள்ளார் மாத்யூ.

இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸார் அவர்களை சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இருவரது சார்பிலும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. அதுகுறித்து 4ம் தேதி தீர்மானிக்கப்படும் என நீதிபதி அறிவித்தார். இதையடுத்து இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் மாத்யூ மற்றும் ஷாஜி ஜானுக்கு ஆண்மைச் சோதனை நடத்த போலீஸார் தீர்மானித்துள்ளனர். இன்று அல்லது நாளை இந்த சோதனை நடைபெறும் எனத் தெரிகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+