பெட்ரோல் விலை ரூ.5-டீசல் ரூ.3 உயர்வு: கேஸ் சிலிண்டர் விலை ரூ. 50 உயர்வு

வீட்டு உபயோகத்துக்கான சமையல் கேஸ் விலை சிலிண்டருக்கு ரூ. 50 உயர்த்தப்பட்டுள்ளது. அதே நேரத்தல் மண்ணெண்ணெய் விலை உயர்த்தப்படவில்லை.
இந்த விலை உயர்வுகள் நள்ளிரவு முதல் அமலுக்கு வருகின்றன.
பல்வேறு மாநிலங்களில் அடுத்தடுத்து தேர்தல் வந்ததால் இந்த விலை உயர்வை மத்திய அரசு ஒத்தி வைத்துக் கொண்டே வந்தது. இதனால் அரசின் எண்ணெய் நிறுவனங்களின் நஷ்டம் ரூ. 2.2 லட்சம் கோடியைத் தாண்டியது.
இப்போதைய சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்தின்படியும், மத்திய அரசு விதிக்கும் பெரும் வரிகளையும் கணக்கில் கொண்டால் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 21.43ம், டீசல் விலையை ரூ. 31.58ம், கேஸ் சிலிண்டெர் விலையை ரூ. 353ம் உயர்த்த வேண்டிய நிலை உள்ளது.
இதற்கு மேலும் விலையை உயர்த்தாமல் இழுத்தடித்தால் இனி கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யக் கூட பணமில்லை என்ற நிலைக்கு எண்ணெய் நிறுவனங்கள் தள்ளப்பட்டன.
இந் நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து முடிவு செய்ய பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அரசியல் விவகாரங்களுக்கான கேபினட் அமைச்சர்கள் குழுக் கூட்டம் இன்று காலை கூடியது.
பிரதமரின் ரேஸ்கோர்ஸ் இல்லத்தில் நடந்த இக் கூட்டத்தில் வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, நிதியமைச்சர் ப.சிதம்பரம், பெட்ரோலிய அமைச்சர் முரளி தியோரா மற்றும் மூத்த அமைச்சர்கள் பங்கேற்றனர்.
முன்னதாக பிரணாப் முகர்ஜி தலைமையில் இந்த அமைச்சர்கள் கூட்டம் பல முறை கூடியபோதும் நிதியமைச்சகம்- பெட்ரோலிய அமைச்சகம் இடையிலான மோதலால் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
இந் நிலையில் இன்று பிரதமர் தலைமையில் இக் கூட்டம் கூடியது.
இதில் விலையை எவ்வளவு உயர்த்துவது, இதனால் ஏற்படும் அரசியல் நெருக்கடிகள், வரிகளைக் குறைப்பது ஆகியவை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
அதில், அரசின் எண்ணெய் நிறுவனங்கள் சொல்லும் அளவுக்கு முழு அளவில் விலையை உயர்த்தாமல், வரிகளையும் ஒரு பக்கம் குறைத்து, இன்னொரு பக்கம் குறைந்தபட்சம் விலையை உயர்த்தலாம் என முடிவெடுக்கப்பட்டது.
இதையடுத்து பொருளாதார விவகாரங்களுக்கான கேபினட் அமைச்சர்கள் குழுவின் கூட்டத்தையும் கூட்டினார் பிரதமர். இதைத் தொடர்ந்து பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 5ம், டீசல் விலையை ரூ. 3ம், வீட்டு உபயோகத்துக்கான சமையல் கேஸ் விலையை சிலிண்டெருக்கு ரூ. 50ம் உயர்த்துவது என முடிவெடுக்கப்பட்டது.
சுங்க, கலால் வரிகள் குறைப்பு:
மேலும் கச்சா எண்ணெய் இறக்குமதி மீதான வரிகளும் குறைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் அரசுக்கு அடுத்த 10 மாதங்களுக்கு ரூ. 22,660 கோடி நஷ்டம் ஏற்படும்.
இதைத் தவிர எண்ணெய் நிறுவனங்களுக்கு வேண்டிய நிதியைத் திரட்ட ஆயில் பாண்டுகளை வெளியிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இன்று நாட்டு மக்களுக்கு பிரதமர் உரை:
இந்த விலை உயர்வுக்கான காரணம், அதைத் தவிர்க்க முடியாமல் போனது ஏன் போன்ற விஷயங்கள் குறித்து இன்று நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மற்றும் வானொலியில் பிரதமர் மன்மோகன் சிங் உரையாற்றவுள்ளார்.
விலை உயர்வு நள்ளிரவு முதல் தான் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டாலும், பல இடங்களில் விலை உயர்வை உடனடியாக அமலாக்கிவிட்டனர்.












Click it and Unblock the Notifications