கருணாநிதியை சந்திக்க மாறன் சகோதரர்களுக்கு அனுமதி மறுப்பு?
சென்னை: ஸ்டாலி்ன் தரப்புடன் மாறன் சகோதரர்கள் நெருங்கினாலும் முதல்வர் கருணாநிதி மற்றும் குடும்பத்தின் பிற உறுப்பினர்கள் அவர்களுடன் நெருங்கிவிடாமல் தடுப்பதில் மு.க. அழகிரி தரப்பு தீவிரம் காட்டி வருகிறது.
நேற்று முதல்வர் கருணாநிதியை சந்தித்து பிறந்த நாள் வாழ்த்துக் கூற தயாநிதி மாறனும், கலாநிதி மாறனும் வந்தபோது அவர்கள், முதல்வரை சந்திக்க விடாமல் தடுக்கப்பட்டு விட்டதாகக் கூறப்படுகிறது.
முதல்வர் கருணாநிதியின் 85வது பிறந்த நாள் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மதுரை தினகரன் தாக்குதல் சம்பவத்திற்குப் பின்னர் மீண்டும் கருணாநிதி குடும்பத்துடன் (குறிப்பாக ஸ்டாலின் தரப்புடன்) தயாநிதி மாறன், கலாநிதி மாறன் சகோதரர்கள் நெருங்கி வருவதாக கூறப்படுகிறது.
நேற்று கருணாநிதிக்கு வாழ்த்து தெரிவித்த மாறன் சகோதரர்கள் இருவரும் கோபாலபுரம் வீட்டுக்கும் வரவில்லை, அண்ணா அறிவாலயத்திற்கும் வரவில்லை. மாறாக சிஐடி காலனியில் உள்ள வீட்டுக்கு நேற்று பிற்பகல் சென்றுவிட்டுத் திரும்பினர்.
அவர்களிடம் வெளியே கூடியிருந்த செய்தியாளர்கள், கருணாநிதியை சந்தித்தீர்களா என்று கேட்டபோது, பதில் சொல்லாமல் சென்றுவிட்டனர். இருவரும் முதல்வரை சந்தித்துவிட்டு திரும்பியதாகவே கருதப்பட்டது.
சந்திக்கவில்லை- அழகிரி:
ஆனால் இருவரும், கருணாநிதியை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதை மு.க.அழகிரி மறைமுகமாக உறுதிப்படுத்தினார்.
மாறன் சகோதரர்கள் முதல்வரைச் சந்தித்தார்களா என்ற கேள்விக்கு மு.க.அழகிரி பதிலளிக்கையில், அப்படி சந்தித்திருந்தால், அவர்களது டிவியில் பிளாஷ் போட்டு பெரிதாக்கியிருக்க மாட்டார்களா என்று புன்னகையுடன் எதிர் கேள்வி போட்டார்.
மேலும் தொடர்ந்து அழகிரி கூறுகையில், அவர்கள் கட்சிக்காக எதையும் செய்யவில்லை. கட்சியின் நலனுக்காக அவர்கள் ஒருபோதும் பாடுபட்டதில்லை. அவர்கள் மீண்டும் கட்சிக்கு வந்தால் அது நிச்சயம் கட்சிக்கு பலவீனமாக இருக்குமே தவிர கண்டிப்பாக ஒரு பலனும் கிடையாது என்றார்.
மாறன் சகோதரர்கள் கருணாநிதியை சந்திக்கக் கூடாது என்பதில் ஸ்டாலின் தரப்பு தவிர்த்து, அழகிரி உள்பட குடும்ப உறுப்பினர்கள் சிலர் தீவிரமாக இருந்தனர் என்றும் கூறப்படுகிறது.
குறிப்பாக அழகிரிதான் இதில் தீவிரமாக இருக்கிறார் என்றும் தெரிகிறது.
சமீபத்தில் முதல்வர் கருணாநிதி உடல்நலம் குன்றியிருந்த நிலையில், அவரை மருத்துவமனைக்குச் சென்று மாறன் சகோதரர்கள் நலம் விசாரித்தனர். அதேபோல, மு.க.ஸ்டாலின் பிறந்தநாளின்போது அவரது இல்லத்திற்குச் சென்று கலாநிதி மாறன் வாழ்த்து தெரிவித்தார்.
கட்சியில் அதிகாரத்தை நிலை நாட்டுவதில் அழகிரி-ஸ்டாலின் தரப்பினருக்கு இடையே மீண்டும் மெளன யுத்தம் தீவிரமாகியுள்ள நிலையில் மாறன் சகேதரர்களை அரவணைத்துச் செல்ல ஸ்டாலின் முடிவு செய்துவிட்டார். அவர்களை மீண்டும் முதல்வருடன் இணக்கமாக இருக்கச் செய்ய முயல்கிறார் என்கிறார்கள்.
ஆனால், இதை அழகிரி தீவிரமாகத் தடுத்து வருகிறார்.
அழகிரிக்கு கட்சிப் பதவி தருவதை ஸ்டாலின், சேலத்தைச் சேர்ந்த மூத்த அமைச்சர் எதிர்த்து வருகின்றனர். அதே போல தனக்கு முக்கிய பொறுப்பு கிடைக்காத வரையில், ஸ்டாலினுக்கு துணை முதல்வர் போன்ற பொறுப்பு தருவதை அழகிரி எதிர்த்து வருகிறார்.
இடையில் மாறன் சகோதரர்கள் ஸ்டாலினுடன் கை குலுக்க ஆரம்பித்துள்ளனர். இந் நிலையில் தான் அவர்களை முதல்வருடன் சந்திக்கவிடாமல் தடுத்துள்ளது அழகிரி தரப்பு.












Click it and Unblock the Notifications