கிரெடிட் கார்டை திருடி பண மோசடி: கூரியர் ஊழியர்கள் கைது
சென்னை: வாடிக்கையாளருக்கு தபால் மூலம் அனுப்பப்பட்ட கிரெடிட் கார்டை திருடி, ரூ. 42 ஆயிரம் பணத்தை மோசடி செய்த கூரியர் நிறுவன ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.
சென்னையைச் சேர்ந்த தனியார் வங்கி தனது வாடிக்கையாளருக்கு கூரியர் மூலம் கிரெடிட் கார்டைஅனுப்பி வைத்தது. ஆனால் கார்டு வாடிக்கையாளருக்குப் போய்ச் சேரவில்லை.
ஆனால் அந்த கார்டு மூலம் ரூ.42 ஆயிரம் அளவுக்கு பொருட்கள் வாங்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அந்த வங்கியிடம் வாடிக்கையாளர் புகார் கொடுத்தார்.
வங்கி நிர்வாகம் போலீஸை அணுகியது. போலீஸார் விசாரணை நடத்தினர். இதில் சம்பந்தப்பட்ட கூரியர் நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர் ஆல்பர்ட், நிறுவன டிரைவர் வள்ளிமுத்து ஆகியோர் தான் அந்தக் கிரெடிட் கார்டை திருடியது தெரிய வந்தது.
அந்தக் கார்டு மூலம், ரூ. 24 ஆயிரம் மற்றும் ரூ.18 ஆயிரம் மதிப்புள்ள 2 செல்போன்களை வாங்கியது தெரிய வந்தது.
அவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார் 2 செல்போனையும் பறிமுதல் செய்தனர். கிரெடிட் கார்டில் அடையாளமாக போட்டோ இருந்தும் மோசடி பேர்வழிகளுக்கு செல்போனை விற்ற வியாபாரியை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.