பிஇ-சுயநிதி கல்லூரிகளில் கட்டணம் ரூ.62.500
சென்னை:தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளுக்கான கட்டண விவரத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில்,
2008-2009ம் கல்வியாண்டில் தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அரசு நடத்தும் கவுன்சிலி்ங் மூலம் மற்றும் கல்லூரி நிர்வாகத்தால் செய்யப்படும் சேர்க்கை மூலம் சேரும் மாணவர்கள் செலுத்திட வேண்டிய ஆண்டுக் கல்வி கட்டணத்தை நிர்ணயம் செய்ய நீதிபதி பாலசுப்ரமணியன் தலைமையில் குழு ஒன்றை அரசு அமைத்தது.
இந்தக் குழு சுயநிதி பொறியியற் கல்லூரிகளின் கூட்டமைப்பு, சுயநிதி பொறியியற் கல்லூரிகளின் தலைவர்கள், கல்வியாளர்கள், பொது மக்கள் ஆகியோரிடம் கட்டணம் குறித்த கருத்துக்களை பெற்றது. மேலும், சுயநிதி கல்லூரிகளின் நிர்வாகத்தினரிடமிருந்து வரவு-செலவு கணக்குகள் மற்றும் அவர்கள் கோரும் கல்விக் கட்டண விவரங்கள் ஆகியவற்றையும் பெற்றது.
அதன் அடிப்படையில், வரும் கல்வியாண்டில் (2008-2009ம் ஆண்டு) தனியார் சுயநிதி பொறியியற் கல்லூரிகளில் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் சேரும் மாணவர்கள் செலுத்த வேண்டிய கல்வி கட்டணத் தொகையை இக்குழு கீழ்க்கண்டவாறு நிர்ணயம் செய்துள்ளது.
அண்ணா பல்கலைக் கழகத்தால் நடத்தப்படும் கலந்தாய்வில் கலந்து கொண்டு ஒதுக்கீடு பெற்று சுயநிதி பொறியியற் கல்லூரிகளில் சேரும் மாணவர்களைப் பொறுத்தவரை கடந்த ஆண்டு செலுத்திய கல்விக் கட்டணமே இவ்வாண்டும் தொடரும்.
அதாவது, தரச் சான்று பெறாத பாடப் பிரிவுகளுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.32,500மும், தரச்சான்று பெற்ற பாடப் பிரிவுகளுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.40,000ம் கட்டணமாக வசூலிக்கப்படும்.
சுயநிதி பொறியியற் கல்லூரிகளில் அண்ணா பல்கலைக் கழகம் நடத்தும் கவுன்சிங் மூலம் அல்லாமல் பிற வகைகளில் சேர்க்கை பெறும் மாணவர்களுக்கு ஆண்டொன்றுக்கான கட்டணம் ரூ.62,500.
சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் உள்ள இடங்கள் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீடு இடங்களாக 65:35 என்ற விகிதத்திலும், சிறுபான்மையினரால் நடத்தப்படும் கல்லூரிகளில் 50:50 என்ற விகிதத்திலும் நிரப்பப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications