எம்.ஜி.ஆர். உறவினர் படுகொலை-ஜெ. கண்டனம்
சென்னை: எம்.ஜி.ஆரின் உறவினர் விஜயன் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில், மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் உறவினரான விஜயன் என்கிற எம்.ஜி.ஆர். விஜயன் நேற்று இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத சிலரால் தாக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார் என்ற தகவல் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன், மனத் துயரம் அடைந்தேன்.
எம்.ஜி.ஆர். வாழ்ந்து மறைந்த இல்லத்தை சிறப்பான முறையில் பராமரித்து, எம்.ஜி.ஆரின் புகழைப் பரப்பும் வகையில், மன்னாதி மன்னன் என்கிற பத்திரிக்கையை நடத்தி வந்த விஜயன், அதிமுக பற்றாளராகவும், அதிமுக தலைமைக்கு விசுவாசமானவராகவும் திகழ்ந்தார்.
திமுக ஆட்சியில், சட்டம் ஒழுங்கு சரிந்து கிடக்கிறது, சமூக விரோதிகள், சுதந்திரமாக நடமாடுகிறார்கள் என்பதையே இது நினைவூட்டுகிறது.
விஜயனைக் கொன்றவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
இதற்கிடையே, விஜயனைக் கொன்ற கொலையாளிகளைப் பிடிக்க 7 தனிப்படைகளை போலீஸார் அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.