விலை உயர்வு: தமிழகம் முழுவதும் இடதுசாரிகள் போராட்டம்
சென்னை: பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பாஜக கட்சிகள் போராட்டம் நடத்தின.
பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வுக்கு இடதுசாரிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. நாடு தழுவிய போராட்டத்துக்கு அவை அழைப்பு விடுத்துள்ளன.
இந்த நிலையில் நேற்று தமிழகம் முழுவதும் இடதுசாரி கட்சிகள், அவை சார்ந்த அமைப்புகள், பாஜக ஆகியவை போராட்டம் நடத்தின.
கடலூரில், இடது சாரிகள் சார்பில் இரு இடங்களில் போராட்டம் நடந்தது. லாரன்ஸ் சாலையில், சிபிஐ சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீஸார் அனைவரையும் கைது செய்தனர்.
கடலூர் அண்ணா பாலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.
விருதுநகர் பஸ் நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மறியல் போராட்டம் நடந்தது. இதையடுத்து 20க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.
தர்மபுரியில் ஏஐடியூசி அமைப்பின் சார்பில், நான்கு சாலை சந்திப்பில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
நாகர்கோவிலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. பெல்லார்மின் தலைமையில், அண்ணா பஸ் நிலையம் முன்பு போராட்டம் நடத்தினர்.
திருவாரூரில், கோட்டூர் என்ற இடத்தில் உள்ள ஓ.என்.ஜி.சி. நிறுவன அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. போலீஸார் விரைந்து வந்து அனைவரையும் கைது செய்து அப்புறப்படுத்தினர்.
தூத்துக்குடியில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நடந்த போராட்டத்தின்போது, நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் கொடும்பாவி தீவைத்த எரிக்கப்பட்டது. இதையடுத்து அனைவரையும் போலீஸார் கைது செய்தனர்.
தூத்துக்குடியில் பாஜக சார்பிலும் போராட்டம் நடத்தப்பட்டது. கட்டை வண்டியில், மோட்டார் சைக்கிளை ஏற்றி ஊர்வலமாக கொண்டு சென்று நூதன முறையில் விலை உயர்வுக்கு எதிர்ப்பைக் காட்டினர்.