For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எம்.ஜி.ஆர். உறவினர் விஜயன் சென்னையில் படுகொலை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் துணைவியார் ஜானகி அம்மாளின் தம்பி மருமகன் விஜயன், சொத்துத் தகராறில் சென்னையில் மிகக் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

ஜானகி அம்மாளின் தம்பி நாராயணனுக்கு 6 மகள்கள் உள்ளனர். அவர்களில் ஒருவர் சுதா. இவரது கணவர்தான் விஜயன் என்கிற விஜயக்குமார். எம்.ஜி.ஆர்.விஜயன் என்றும் இவர் அழைக்கப்படுவார்.

எம்.ஜி.ஆர் வாழ்ந்த ராமாவரம் தோட்ட இல்ல வளாகத்தில் சுதா குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

எம்.ஜி.ஆரின் உயிலை நடைமுறைப்படுத்துவது உள்ளிட்டவை தொடர்பாக சுதாவும், அவரது சகோதரி லதாவுக்கும் இடையே பிரச்சினை உள்ளது. மேலும், பாகம் பிரிக்கப்படாத சில சொத்துக்கள் தொடர்பாகவும் அனைத்து சகோதரிகளுக்கும் இடையே பிரச்சினையும் உள்ளது.

ஏற்கனவே லதா மற்றும் அவரது கணவர் ராஜேந்திரன் மீது சுதா வழக்கும் தொடர்ந்துள்ளார். அது நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் நேற்று விஜயன் படுகொலை செய்யப்பட்டார்.

விஜயனின் அலுவலகம், அபிராமபுரத்தில் உள்ளது. நேற்று இரவு 9 மணிக்குக் காரில் வீட்டுக்குக் கிளம்பினார் விஜயன். அவரது கார், கோட்டூர்புரம் பகுதியில் வந்தபோது திடீரென பின்னால் வந்த ஒரு கார், விஜயன் கார் மீது இடித்தது.

இதையடுத்து விஜயன் காரை நிறுத்தி விட்டு கீழே இறங்கினார். அப்போது பின்னால் வந்து இடித்த அம்பாசடர் காரில் இருந்து 8 பேர் கீழே இறங்கினர். அவர்களது கைகளில் பெரிய பெரிய உருட்டுக் கட்டைகள், கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்கள் இருந்தன.

அனைவரும் சேர்ந்து விஜயனை சரமாரியாக வெட்டித் தாக்கினர். பின்னர் அக்கும்பல் தப்பியோடியது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து விட்ட இந்தத் தாக்குதலால் அப்பகுதியில் சென்று கொண்டிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

விஜயன் மீட்கப்பட்டு அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி பத்தரை மணியளவில் உயிரிழந்தார்.

கணவர் கொல்லப்பட்டதற்கு சகோதரி லதாவின் கணவர் ராஜேந்திரனும், அவரது மகனும்தான் காரணம் என அபிராமபுரம் போலீஸில், சுதா புகார் கொடுத்துள்ளார். அதன் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எம்.ஜி.ஆர். குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர், மிகக் கொடூரமாக கொல்லப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜயனைக் கொன்றது கூலிப் படையாக இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X