பெட்ரோல்: 9ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்-ஜெ.
சென்னை: பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை உயர்வைக் கண்டித்து வருகிற 9ம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் உள்ள மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் முன்பு அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரலாறு காணாத அளவுக்கு முதன் முதலாக பெட்ரோல் விலையை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 3 ரூபாயும், சமையல் எரிவாயு சிலிண்டருக்கு 50 ரூபாயும் உயர்த்தி, மக்களை சொல்லொணாத் துயருக்கு மத்திய அரசு ஆளாக்கியுள்ளது.
இந்த விலை உயர்வு அத்தியாவசியப் பொருட்கள் உள்பட அனைத்துப் பொருட்களின் விலையும் உயர வழி வகுக்கும். இதுபோன்ற மத்திய அரசின் நடவடிக்கை நமது பொருளாதார மேம்பாட்டை பின்னடையச் செய்கின்ற ஒரு பிற்போக்கு நடவடிக்கை ஆகும்.
வரலாறு காணாத அளவுக்கு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலையை எட்டாவது முறையாக உயர்த்தியுள்ள காங்கிரஸ் தலைமையிலான மத்தியஅரசுக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்துக் கொண்டு, ஆர்ப்பாட்டம், போராட்டம், பந்த் எனும் மக்களை ஏமாற்றும் நாடகங்களை நடத்திக் கொண்டிருக்கும் கட்சிகளின் போக்கு கண்டித்தக்கத்தக்கது.
உண்மையிலேயே இந்தக் கட்சிகளுக்கு மக்கள் மீது அக்கறை இருக்குமானால், மத்திய அரசுக்குக் கொடுத்து வரும் ஆதரவை அக்கட்சிகள் உடனடியாக விலக்கிக் கொள்ள வேண்டும். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்தும்,அதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து இதை திரும்பப் பெறக் கோரி மாவட்டத் தலைநகரங்களில் உள்ள மத்திய,மாநில அரசு அலுவலகங்கள் முன்பு 9ம் தேதி காலை 10 மணியளவில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
வி.சிறுத்தைகள் ஒரு வாரம் போராட்டம்:
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்திய அரசு மீண்டும் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலையை தாறுமாறாக உயர்த்தியுள்ளது. நடுத்தர மற்றும் உழைக்கும் வர்க்கத்தை சார்ந்த மக்களின் வாழ்வின் இடி இறங்கியதை போன்ற அதிர்ச்சியை தந்துள்ளனர்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததால், இந்நிலை ஏற்பட்டுள்ளது என வழக்கமான காரணத்தை சொல்கின்றனர். அது தான் காரணமென்றால் உலகமெங்கும் பரவலாக இந்த விலை உயர்வு நிகழ வேண்டுமல்லவா? அல்லது ஆசிய நாடுகளிலாவது இத்தகு நிலை உருவாக வேண்டுமல்லவா? இந்தியாவில் மட்டும் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை இவ்வாறு விலை உயர்வு ஏற்படுவதற்கு இந்திய அரசின் பொருளாதார கொள்கை மற்றும் வரிவிதிப்பு முறை தான் காரணமாகும்.
இந்திய அரசின் போக்கை கண்டித்து இடதுசாரிகள் முன்னெடுக்கும் முழு அடைப்பு போராட்டத்தை விடுதலை சிறுத்தைகள் வரவேற்று ஆதரிக்கிறது. மேலும், வரும் 9ம் தேதி முதல் 13ம் தேதி வரை தமிழகமெங்கும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும். அந்த வாரம் கண்டன வாரமாக கடைபிடிக்கிறது என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications