நாகர்கோவில்: சுவாமி ஊர்வலத்தில் கலவரம்-தடியடி
நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே கோவில் சுவாமி ஊர்வலத்தில் கலவரம் வெடித்தது. கும்பலைக் கலைக்க போலீஸார் தடியடி நடத்தினர்.
நாகர்கோவில் அடுத்த பிள்ளையார்குளத்தில் உள்ள முத்தாரம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. 2ம் நாளான நேற்று சப்பர பவனி தொடங்கியது. அந்த பகுதியில் உள்ள ஒரு தெருவில் சப்பரம் வர ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க கன்னியாகுமரி டிஎஸ்பி ஸ்டேன்லி மைக்கேல் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருந்தபோது சுவாமி ஊர்வலம் கோயிலில் இருந்து புறப்பட்டு வந்தது. பிரச்சனைக்குரிய வழியாக ஊர்வலத்தை திருப்ப சிலர் முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்தனர். அப்போது திடீரென மோதல் ஏற்பட்டது. சராமரி கற்களும் வீசப்பட்டன.
இதில் இன்ஸ்பெக்டர் அசோகன், சப்-இன்ஸ்பெக்டர்கள் முத்துராஜ், சத்யராஜ் மற்றும் போலீசார் காயம் அடைந்தனர். இதையடுத்து போலீசார் தடியடி நடத்தினர். பக்தர்களை போலீசார் ஓட ஓட விரட்டி அடித்தனர். சப்பரத்தை அப்படியே நடுவீதியில் வைத்து விட்டு பக்தர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர்.
தடியடியில் படுகாயம் அடைந்தவர்களை போலீஸ் வேனில் ஏற்றி நாகர்கோவில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரத்த காயத்துடன் ஓட்டம் பிடித்த பலர் போலீஸ் கைதுக்கு பயந்து தலைமறைவாகிவிட்டனர். அங்கு பதற்றம் உருவாகி உள்ளதால் போலீசார் பலத்த காவலில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications