தமிழகத்தில் கம்யூனிஸ்ட் பந்த்-ஓரளவுக்கு ஆதரவு
மாநிலம் முழுவதும் மறியலில் ஈடுபட்ட 20,000 கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து தமிழகத்தில் இன்று பந்த் நடத்த இடதுசாரிக் கட்சிகள் அழைப்பு விடுத்தன. இதையடுத்து இன்று காலை 6 மணிக்கு பந்த் தொடங்கியது.
இந்த முழு அடைப்பு போராட்டத்தையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு கட்சி தொண்டர்கள் ரயில் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து போராட்டம் நடத்திய ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.
அதே போல திருவாரூர், கோவை, மதுரை, திருப்பூர், புதுக்கோட்டை, ஆகிய இடங்களில் பஸ் மறியல்களும், பஸ்கள் மீதும் கல்வீச்சு சம்பவங்களும் நடந்தன. இதனால் அந்தப் பகுதிகளில் சிறிது நேரம் பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இங்கும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.
மறியல்கள் நடந்த இடங்களில் தொண்டர்கள் கைது செய்யப்பட்ட பின், சிறிது நேரத்தில் இயல்பு நிலை திரும்பிவிட்டதால் ரயில், பஸ் போக்குவரத்தில் தொடர்ந்து பெரிய அளவி்ல் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை.
இடதுசாரி தொழிற்சங்கமான சிஐடியூவுடன் இணைந்த தமிழ்நாடு ஆட்டோ ரிக்ஷா டிரைவர்கள் சங்கம் இந்த பந்த்துக்கு ஆதரவு தெரிவித்தால் அந்த யூனியனைச் சேர்ந்த ஆட்டோக்கள் இயங்கவில்லை.
வணிகர் சங்கத்தின் சார்பில் வேறு காரணத்திற்காக (அதன் தலைவர் வெள்ளையன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து) இன்று கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எனவே சென்னையில் சில பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
லாரிகளில் சரக்கை ஏற்றி, இறக்கும் தொழிலாளர்களில் ஒரு பிரிவினர் (இடதுசாரி சங்கங்களைச் சேர்ந்தவர்கள்) இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
3 எம்.எல்.ஏக்கள் கைது:
கம்யூனிஸ்டுகளுக்கு ஆதரவு அதிகமுள்ள திருவாரூர், திருப்பூர் ஆகிய இடங்களில் பந்த்துக்கு நல்ல ஆதரவு கிடைத்தது. அங்கு பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன. ஆட்டோக்கள் ஓடவில்லை. வாகனப் போக்குவரத்தும் குறைவாக காணப்பட்டது.
திருத்துறைப்பூண்டியில் எம்.எல்.ஏ உலகநாதன் தலைமையில் ரயில் மறியல் போராட்டம் நடந்தது. இதையடுத்து 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
மன்னார்குடியில், எம்.எல்.ஏ சிவபுண்ணியம் தலைமையில் நூற்றுக்கணக்கானோர் பஸ் மறியலில் ஈடுபட்டனர். அவர்களையும் போலீஸார் கைது செய்தனர்.
இதேபோல நன்னிலத்தில் எம்.எல்.ஏ பத்மாவதி தலைமையில் பஸ் மறியல் போராட்டம் நடந்தது. அவர்களும் கைது செய்யப்பட்டனர்.
சிவகாசியில் பஸ் மீது கல் வீச்சு:
சிவகாசியில் அரசு பஸ் மீது கல் வீசிப்பட்டது. இதில் பஸ்சின் முன்கண்ணாடி சுக்குநூறாக நொறுங்கியது. திருத்தங்கல்-சாத்தூர் ஆகிய இடங்களிலும் 2 பஸ்கள் மீது கற்கள் வீசப்பட்டு கண்ணாடி நொறுக்கப்பட்டது.
திருப்பூரில் கடும் பாதிப்பு:
திருப்பூரில் 5,000க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 2 லட்சம் தொழிலாளர்கள் பணிக்கு வரவில்லை.
சென்னையில் மறியல்:
சென்னையில், கிண்டி ரயில் நிலையத்தில் நூற்றுக்கணக்கான இடதுசாரி தொண்டர்கள் ரயில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது வந்த மின்சார ரயிலை தடுத்து நிறுத்தி மறியல் செய்தனர்.
இதையடுத்து போலீஸார் தடியடி நடத்தி அவர்களைக் கலைத்தனர். பின்னர் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
இதேபோல அண்ணா சாலை, சென்டிரல் ரயில் நிலையம் முன்பும் சாலை மறியலில் இடதுசாரியினர் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை புறநகர்ப் பகுதிகளான ஆவடி, அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் பஸ் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.
இந்த பந்த்தையொட்டி தமிழகம் முழுவதுமே பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
மேலும் மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், வர்த்தக பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
மாநிலம் முழுவதும் பஸ்-ரயில் மறியல், கல்வீச்சு ஆகிய செயல்களில் ஈடுபட்ட சுமார் 20,000 இடதுசாரித் தொண்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.