11 வயது சிறுமியை கடத்திய டியூஷன் ஆசிரியர்
நாகர்கோவில்: நாகர்கோவிலில், 11 வயது சிறுமியைக் கடத்திச் சென்ற டியூஷன் ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
நாகர்கோவில் வடசேரி பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். எம்.பி.ஏ பட்டதாரியான இவர் அப்பகுதியில் உள்ள சிறுவர்களுக்கு டியூஷன் நடத்தி வந்தார். பக்கத்து வீட்டை சேர்ந்த பெரியசாமி மகள் ரீனா என்ற 6ம் வகுப்பு மாணவி இவரிடம் டியூஷன் படித்து வந்தார்.
ராஜேஷூக்கு ரீனா மீது அதிக பாசம். அடிக்கடி அவரை தூக்கி கொஞ்சி மகிழ்வார். இந்நிலையில் கடந்த 26ம் தேதி டியூஷனுக்கு சென்ற ரீனா திடீரென மாயமானார். மகளை காணாமல் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் பல இடங்களில் தேடினர்.
அக்கம் பக்கத்தில் விசாரித்து போது ஆசிரியர் ராஜேஷ் அழைத்து சென்றதாக கூறினர். அதே நாளில் ராஜேஷும் தலைமறைவாகிவிட்டதால் வடசேரி போலீசில் பெற்றோர் புகார் செய்தனர்.
புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து ராஜேஷ் மற்றும் ரீனாவை தேடி வந்தனர்.
ராஜேஷின் செல்போன் பேச்சுக்களை வைத்து சென்னை, திருப்பூர், கோவை, மதுரை உள்பட பல இடங்களில் தேடினர். கடைசியாக அவர் பெங்களூரில் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் செல்லதங்கம், சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீகுமார் தலைமையிலான தனிப்படை போலீசார் பெங்களூர் சென்றனர். அங்கு வாடகை வீட்டில் தங்கியிருந்த ராஜேஷை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவருடன் இருந்த சிறுமி ரீனா மீட்கப்பட்டார். இருவரையும் நாகர்கோவில் அழைத்து வந்த போலீசார் விசாரணைக்கு பிறகு ராஜேஷை கோர்டடில் ஆஜர்படுத்தினர்.
சிறுமியை கடத்தியது ஏன் என்று கேட்டபோது ரீனா மீது எனக்கு அதிக அன்பும் பாசமும் உண்டு. அவளை பிரிய எனக்கு மனமில்லை. அவளை வளர்த்து எனக்கு சொந்தமாக்கி கொள்ள விரும்பினேன் என்று போலீசாரிடம் ராஜேஷ் தெரிவித்துள்ளார்.