விபச்சாரம்- துபாயில் 2 இந்தியர்கள் கைது
துபாய்: 3 பெண்களை அடைத்து வைத்து அவர்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்த முயன்றதாக இரு இந்தியத் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
துபாயில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபடுத்துவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து நம்ம ஊர் போலீஸ் பாணியில், மாறு வேடத்தில் ஒரு போலீஸ்காரர் அந்த வீட்டுக்கு அனுப்பப்பட்டார்.
இந்தியத் தொழிலாளர் ஒருவரை அவர் அணுகி, உல்லாசமாக இருக்க பெண் தேவை என்று கூறியுள்ளார். இதையடுத்து அந்த இந்தியர் சம்பந்தப்பட்ட வீட்டுக்கு போலீஸ்காரரை அழைத்துச் சென்றார்.
அந்த வீட்டில் 3 வங்கதேசப் பெண்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். மாறு வேடத்தில் சென்ற போலீஸ்காரர், அந்த பெண்களை விடுவித்தார். தன்னை அழைத்து வந்த இந்தியர் உள்ளிட்ட இரு இந்தியத் தொழிலாளர்களைக் கைது செய்தார்.
கைது செய்யப்பட்ட இரு இந்தியத் தொழிலாளர்களும் 20 வயதுகளில் உள்ளனர். வீட்டு வேலை செய்து வந்த 3 வங்கதேசப் பெண்களையும் கட்டாயப்படுத்தி இங்கு அடைத்து வைத்திருந்தனர். விபச்சாரத்தில் ஈடுபட மறுத்தால் கொன்று விடுவதாகவும் மிரட்டியதாக போலீஸ் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இரு இந்தியர்களும் துபாய் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, தாங்கள் அப்பாவிகள் என இருவரும் தெரிவித்தனர்.