பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்
சென்னை: பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று மாவட்டத் தலைநகரங்களில் அதிமுக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.
அதன்படி இன்று மாவட்டத் தலைநகரங்களில் உள்ள மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
சென்னையில் சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் இல்லம் எதிரே நடந்த போராட்டத்திற்கு அவைத்தலைவர் மதுசூதனன் தலைமை தாங்கினார். ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் கலந்து
கொண்டனர்.
அப்போது பெண்கள் நடுச்சாலையில் விறகு அடுப்பு எரித்து சமையல் செய்து நூதன முறையில் எதிர்ப்பைக் காட்டினர். ஆண்கள் காஸ் சிலிண்டர்களை (காலி சிலிண்டரைத்தான்) தலையில் தூக்கிச் சுமந்தபடி காணப்பட்டனர்.
காஞ்சிபுரத்தில் சுலோச்சனா சம்பத் தலைமையிலும், வேலூரில் ஜெயலலிதாவின் அரசியல் ஆலோசகர் பொன்னையன் தலைமையிலும் போராட்டம் நடந்தது.
விழுப்புரத்தில் நடந்த போராட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமை தாங்கினார்.
இதேபோல தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்தது. போராட்டத்தில் விறகு அடுப்புகளை எரித்தும், சிலிண்டர்களை தலையில் சுமந்தபடியும், மாட்டு வண்டிகளில் பைக்குகளை ஏற்றி ஓட்டியும் நூதன முறையில் போராட்டம் நடத்தப்பட்டது.












Click it and Unblock the Notifications