மாமல்லபுரம் கடலில் சீற்றம்-ஊருக்குள் நீர் புகுந்தது
சென்னை: மாமல்லபுரத்தில் திடீர் கடல் சீற்றம் ஏற்பட்டது. ஊருக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் பீதியடைந்தனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமையன்று மாமல்லபுரத்தில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதியது. மாலை 5 மணியளவில் கடற்கரைக் கோவில் பகுதியில், கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.
ராட்சத அலைகள் எழுந்ததால் அங்கு பீதி ஏற்பட்டது. அலைகள் கிட்டத்தட்ட 15 அடிக்கு மேல் எழுந்ததால், கடல் நீர் கரையைத் தாண்டி 100 அடி தூரத்திற்கு உள்ளே புகுந்தது. கடற்கரைக் கோவில் உள்ள பகுதியில் பெரிய பெரிய கற்கள் போடப்பட்டிருப்பதால் கோவிலுக்குள் நீர் புகவில்லை.
இந்த திடீர் சீற்றம் மற்றும் கடல் நீர் புகுந்ததால் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 6 படகுகள் சேதமடைந்தன. கட்டுமரங்களில் போடப்பட்டிருந்த மீன் பிடி வலைகள் உள்ளிட்டவையும் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டன.
கிட்டத்தட்ட கால் மணிநேரத்திற்கு கடல் கடும் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் பெரும் பீதியடைந்தனர்.












Click it and Unblock the Notifications