ஜெயலலிதாவுடன் சந்திப்பு?- ஜி.கே.மணி மறுப்பு
ஊட்டி: ஜெயலலிதாவை நான் சந்திக்க ஊட்டிக்கு வரவில்லை என பாமக தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ளார்.
அதிமுக பிரமுகரின் மகளுக்கும் மணியின் மகனுக்கும் திருமணம் நிச்சயமாகியுள்ளது. இந்தத் திருமணத்தில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசும் பங்கேற்கவுள்ளனர்.
இது அதிமுக-பாமக இடையிலான கூட்டணி முயற்சிகளுக்கு வலு சேர்க்கும் எனக் கூறப்படுகிறது.
இதற்கிடையே இப்போது ஜெயலலிதா, தனது தோழி சசிகலாவுடன் ஊட்டியில் ஓய்வில் இருந்து வருகிறார். இந் நிலையில் ஜி.கே.மணி ஊட்டி வந்தார். அவர் ஜெயலலிதாவை சந்திக்கவே வந்ததாக செய்தி பரவியது.
இந் நிலையில் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
தமிழகத்தில் பொறியியல் மற்றும் தன்னாட்சி கல்லூரி நிறுவனங்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
பொறியியல் மற்றும் பிற கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வங்கிக் கடன் தடையின்றி கிடைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு விவசாயிகள் எதிர்பார்க்கும் விலையை குறைந்தபட்ச விலையாக நிர்ணயிக்க வேண்டும்.
வரும் நாடாளுமன்றத் தேர்தல் வரை திமுகவுடன் கூட்டணி தொடரும்.
எனது மகனுக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. திருமணத்தை எங்கு எப்போது நடத்துவது என்பது பற்றி ஆலோசனை தான் நடத்தி வருகிறோம். இன்னும் அழைப்பிதழ் கூட அச்சடிக்கப்படவில்லை.
அதற்குள் நான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பத்திரிக்கை கொடுக்க உள்ளதாக செய்தி பரவி இருக்கிறது. இது உண்மைக்கு மாறான தகவல்.
ஜெயலலிதாவை சந்திப்பதற்காக நான் ஊட்டிக்கு வரவில்லை என்றார்.












Click it and Unblock the Notifications