ஜெ பாதுகாப்பு: அதிகாரி நியமிக்கப்படுவார்-அரசு

முன்னதாக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவில்,
தனக்கு வழங்கப்பட்டு வந்த இசட் பிளஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டு விட்டதாகவும், தனது உயிருக்கு விடுதலைப் புலிகள் மற்றும் பல்வேறு தீவிரவாத அமைப்புகளால் அச்சுறுத்தல் உள்ளதாகவும், இதனால் மீண்டும் இசட் பிளஸ்' பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், குண்டு துளைக்காத கார் வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இதையடுத்து ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பு குறித்து எஸ்பி ரேங்கி்ல் உள்ள அதிகாரி ஆய்வு செய்ய வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
இந் நிலையில் இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு பாதுகாப்பு அளிப்பது குறித்து சென்னை உயர்நீதி மன்றம் ஒரு தீர்ப்பினை வழங்கியுள்ளது. அந்தத் தீர்ப்பை வழங்கிய நீதிபதி, இந்த வழக்கில் தற்போதைய முதல்வருக்கு எதிராக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நீதிமன்றம் ஏற்கவில்லை என்று தெளிவாக சொல்லியிருக்கிறார்.
ஜெயலலிதாவிற்கு கூடுதல் பாதுகாப்பு தருவது குறித்து, போலீஸ் எஸ்பி் அந்தஸ்துக்கு குறையாத அதிகாரி ஒருவர் ஆய்வு செய்து அறிக்கை அளித்திட வேண்டுமென்று நீதிபதி சொல்லியிருக்கிறார்.
ஜெயலலிதாவிற்கான பாதுகாப்பு குறித்து சட்டமன்றத்திலேயே அதிமுக உறுப்பினர் கேள்வி எழுப்பினார். அதற்கு முதல்வர் அளித்த பதில் வருமாறு:
''முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இசட் பிளஸ் பாதுகாப்புப் பெற தகுதி உடையவர். மறுக்கவில்லை. மத்திய அரசு ஒவ்வொரு வகையான பாதுகாப்பு நிலைக்கும் என்னென்ன பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட வேண்டுமென்று விரிவாக மாநில அரசுகளுக்கு ஆணை வழங்கியுள்ளது.
அந்த அடிப்படையிலே ஒரு துளியும் குறையாமல் முன்னாள் முதல்வருக்கு எந்தவிதமானக் குறைபாடும் இல்லாமல், மேலும் சொல்லப் போனால் மத்திய அரசு கூறியிருக்கும் பாதுகாப்பு வசதிகளை விட கூடுதலாகத் தான் இந்த அரசால் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இது சம்பந்தமாக ஜெயலிலதா உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசுக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளார். அந்த வழக்கில் குறிப்பாக அவர் தனது வீட்டைச் சுற்றிலும் குளோஸ்டு சர்கியூட் டி.வி. கேரமாக்கள், அவர் பயணம் செய்யும்போது ஜாமர் வாகனம், ஒரு ஆம்புலன்ஸ் வண்டி ஆகியன வழங்கப்பட வேண்டுமென்று சொல்லியிருக்கிறார்.
இசட் ப்ளஸ் பிரிவில் பாதுகாப்பை பெறுபவர்களுக்கு இந்த மூன்றும் தரப்பட வேண்டுமென்று மத்திய அரசின் ஆணையில் குறிப்பிடவில்லை.
மேலும் தனக்கு அரசின் சார்பில் வழங்கப்படும் அனைத்து வாகனங்களும், பெட்ரோல் வாகனங்களாக இருக்க வேண்டுமென்றும், டீசல் வண்டியே அனுப்பக் கூடாது என்றும் ஒரு கோரிக்கை வைத்துள்ளார்.
அவர் பயணம் செய்வதற்கு குண்டு துளைக்காத கார் ஒன்று வேண்டுமென்று கேட்டார். முதல்வர் என்ற முறையில் எனக்கு எந்த வகையான குண்டு துளைக்காத கார் அரசின் சார்பில் தரப்பட்டிருக்கிறதோ, அதே போன்ற ஒரு கார் (அம்பாஸிடர்) அவருக்கு தற்போது வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் அதைப் பயன்படுத்துவதில்லை.
மேலும் அவர் தனது பாதுகாப்பிற்காக எ தெந்த அதிகாரிகளை வேண்டுமென்று கேட்டாரோ, அவர்கள் எல்லாம் அனுப்பப்பட்டுள்ளார்கள்.
தனது பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்பார்வை செய்ய ஓய்வு பெற்ற காவல் துறைத் தலைவர் மற்றும் இரண்டு அதிகாரிகளைக் கொண்ட மூவர் குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்றும் அவர் தொடுத்த வழக்கிலே சொல்லியிருக்கிறார்.
நாம் அம்மையார் அவர்களுடைய பாதுகாப்பைப் பற்றி கவலைப்படாதவர்கள் அல்ல. ஆனால் எது முடியுமோ அதைத் தான், எது சட்டத்திற்கு உட்பட்டதோ அதைத் தான் நாம் செய்ய முடியும் என்பதால், அதைச் செய்து கொண்டிருக்கிறோம்.
இதற்கு மேலும் பாதுகாப்பு வேண்டுமென்று உயர் நீதிமன்றமோ, உச்ச நீதிமன்றமோ கட்டளையிடுமேயானால் அதனைத் தருவதற்கு இந்த அரசு தயாராக இருக்கிறது''.
முதல்வர் கருணாநிதி இவ்வாறு சட்டமன்றத்திலேயே தனது விளக்கத்தை அளித்துள்ளார்.
தற்போது நீதிமன்றம் பாதுகாப்பை அதிகப்படுத்த வேண்டுமென்று எந்த ஆணையையும் பிறப்பிக்கவில்லை. அதிகாரி ஒருவரை நியமித்து, அவரைக் கொண்டு ஆய்வு செய்திட வேண்டுமென்று சொல்லியுள்ளது.
நீதிமன்றத்தின் தீர்ப்பையேற்று, அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டு, அவரைக் கொண்டு ஆய்வு செய்து, அவரது பரிந்துரை என்னவென்று கேட்டு இந்த அரசு செயல்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications