காங். தலைவர் கிருஷ்ணசாமி திடீர் டெல்லி பயணம்
சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி திடீரென டெல்லி சென்றுள்ளார். சமீபத்தில் கிருஷ்ணசாமிக்கு அட்வைஸ் கூறி மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி காட்டமான அறிக்கை விட்டதன் பின்னணியில் இந்தப் பயணம் மேற்கொள்ளப்பட்டிருப்பதால் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வு அறிவிக்கப்பட்டது. இதை அனைத்துக் கட்சிகளும் கடுமையாக கண்டித்தன. இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி ஒருஅறிக்கை விட்டார்.
அதில், ஆந்திராவில் அரசே, காஸ் விலை உயர்வை ஏற்றுக்கொண்டு, விலை உயர்வை மக்கள் மீது திணிக்கவில்லை. அதேபோல தமிழக அரசும் நடந்துகொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார்.
அதற்கு காட்டமான ஒரு பதிலை மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி அளித்தார். அவர் வெளியிட்ட அறிக்கையில், திமுக அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை பட்டியலிட்டு இது எதையுமே ஆந்திர அரசு மேற்கொள்ளவில்லை. முதலில் இதுபோன்ற திட்டங்களை காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் நிறைவேற்ற கிருஷ்ணசாமி அறிவுரை கூறட்டும். பிறகு திமுக அரசை அவர் விமர்சிக்கலாம் என்று கூறியிருந்தார்.
அத்தோடு நில்லாமல் ஒரு பொதுக்கூட்டத்திலும் கிருஷ்ணசாமியை விமர்சித்துப் பேசியிருந்தார் ஆற்காடு வீராசாமி.
காங்கிரஸ் தலைவருக்கு சூடான பதிலளித்து திமுக தரப்பிலிருந்து வெளியான முதல் அறிக்கை இது என்பதால், திமுக, காங்கிரஸ் இடையே உரசல் ஏற்பட்டது.
இந்நிலையில் கிருஷ்ணசாமி நேற்று டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்தித்து பேச திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
கிருஷ்ணசாமியின் டெல்லி பயணம் தனிப்பட்ட முறையிலானது என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும் தனது பயணத்தின்போது ஆற்காடு வீராசாமியின் பேச்சு குறித்து அவர் சோனியா காந்தியிடம் எடுத்துரைப்பார் என்று கூறப்படுகிறது.
காரணம், இலவச சைக்கிள் திட்டம் ஜெயலலிதா ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. அதேபோல இலவச மின்சாரத் திட்டம் எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்டதாகும். மேலும் சில திட்டங்கள் மத்திய அரசின் நிதியுதவியோடுதான் நிறைவேற்றப்படுகிறது. எனவே இந்தத் திட்டங்களை தாங்களே நிறைவேற்றுவது போல திமுக கூறுவது வருத்தமளிப்பதாக காங்கிரஸ் கட்சியினர் கருதுகின்றனர்.
மேலும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸுக்குப் பதிலளித்து முதல்வர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் நடப்பது திமுக ஆட்சி, கூட்டணி ஆட்சி அல்ல. எனவே கூட்டணிக் கட்சிகளை எதற்கெடுத்தாலும் கலந்து ஆலோசிப்பது சாத்தியமல்ல என்று கூறியிருப்பதும் காங்கிரஸ் கட்சியினரை கோபம் கொள்ளச் செய்துள்ளதாம்.
எனவே சோனியாவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் இதுகுறித்து கிருஷ்ணசாமி அவரிடம் கூறக் கூடும் எனக் காங்கிரஸ் தரப்பில் கூறப்படுகிறது.
அதேசமயம், கிருஷ்ணசாமியின் பதவிக்கே ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே தனது பதவியை காத்துக் கொள்ளத்தான் அவர் டெல்லிக்கு பயணம் செய்திருப்பதாக எதிர் தரப்பினர் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications