தமிழக அரசு ஊழியர்களுக்கு 'ஹெல்த் இன்சூரன்ஸ்'
சென்னை: நாட்டிலேயே முதல் முறையாக தமிழக அரசு ஊழியர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் உதவும் வகையிலான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை (health insurance scheme) முதல்வர் கருணாநிதி இன்று தொடங்கி வைத்தார்.
அரசு அலுவலர்கள், அரசுப் பொதுத் துறை நிறுவனங்கள், வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள், பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் பணிபுரிவோர், அவர்களது குடும்பத்தினர் இதன் மூலம் பலனடைவர்.
இதன் மூலம் ஒவ்வொரு நான்கு ஆண்டு காலத்திற்கும் ரூ. 2 லட்சம் வரை மருத்துவ செலவுகளுக்காக நிதியுதவி பெறலாம்.
இத் திட்டத்தை இன்று முதல்வர் கருணாநிதி முறைப்படி துவக்கி வைத்து 10 ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீட்டுக்கான அடையாள அட்டைகளை வழங்கினார்.
இந்த திட்டத்தின் மூலம் பலனடைய ஒவ்வொரு ஊழியரும் ஆண்டுக்கு ரூ. 300 ப்ரீமியம் கட்ட வேண்டும். மேலும் 12.5 சதவீதம் சேவை வரியும் செலுத்த வேண்டும். இது மாதாமாதம் ரூ. 25 என்ற அளவில் ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்படும். அதே போல ஒவ்வொரு ஊழியருக்கும் அரசின் சார்பில் ரூ. 195ம் அதற்கான சேவை வரியும் செலுத்தப்படும்.
ஸ்டார் ஹெல்த் அல்லைட் இன்சூரன்ஸ் நிறுவனம் மூலமாக இந்தத் திட்டம் அமல்படுத்தப்படுகிறது.
இந்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் நான்கு ஆண்டுகளைக் கொண்ட ஒரு தொகுப்புக் கால அளவிற்கு ரூ. 2 லட்சம் வரை அரசுப் பணியாளர் தனக்கு மட்டுமோ அல்லது அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் சேர்த்தோ பணச் செலவின்றிச் சிகிச்சைகள் பெறலாம்.
இத்திட்டத்தின் மூலம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள 300 மருத்துவமனைகளில் 52 வகையான நோய்களுக்கு சிகிச்சைகள் பெறலாம். மேலும் பெங்களூர், டெல்லி, புதுச்சேரி, திருவனந்தபுரத்தில் உள்ள சில மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெறலாம்.
லேபராஸ்கோபிக், இதய அறுவை சிகிச்சை உள்ளிட்ட அறுவை சிகிச்சைகளையும் செய்து கொள்ளலாம். மருத்துவருக்கான செலவு, மருத்துவமனையில் தங்கும் செலவு, மருத்து சோதனைகள், உணவு செலவுகள் ஆகியவற்றை இந்தத் திட்டத்தின் கீழ் ஊழியர்களும் குடும்பத்தினரும் பெறலாம்.
இத்திட்டம் தொடர்பாக அரசுப் பணியாளர்களுக்கு ஏதேனும் குறைபாடுகளோ சிரமங்களோ நேர்ந்தால் அவற்றைக் களைய மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் குழுக்களும், ஒரு உயர்நிலைக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளன.
ஊழியர்கள், அவரது கணவர் அல்லது மனைவி, மகன், மகள் எனில் அவர்கள் வேலையில் சேரும் வரையில், அல்லது திருமணம் ஆகும் வரையில் அல்லது 25 வயது நிறைவடையும் வரையில்; திருமணமாகாத அரசுப் பணியாளர் எனில் அவர்களுக்குத் திருமணமாகும் வரை அவர்களுடைய பெற்றோர் இத்திட்டத்தின் கீழ் பயன் பெற தகுதி படைத்தவர்கள் ஆவர்.
இந்தியாவிலேயே முதன் முறையாக தமிழகத்தில் தான் அரசு ஊழியர்களுக்காக இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு ஊழியர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இத் திட்டத்தில் சேர 8 லட்சம் ஊழியர்கள் பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications