இலங்கையிலிருந்து கடத்தி வரப்பட்ட முருகன் சிலை மீட்பு
சென்னை: லங்கையில் இருந்து 3 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்திற்கு கடத்தி வரப்பட்ட ரூ.25 லட்சம் மதிப்புள்ள ஐம்பொன் முருகன் சிலை மீட்கப்பட்டுள்ளது.
இலங்கையின் கதிர்காமத்திலிருந்து இந்த சிலை தமிழகத்திற்கு கடத்தி வரப்பட்டது. ஒரு அடி உயரமுள்ள 300 ஆண்டுகள் பழமையான இந்த முருகன் சிலையை தமிழகத்தில் ஒரு கும்பல் பதுக்கி வைத்திருப்பதும், அதை விற்க முயன்று வருவதும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு தெரியவந்தது.
இதையடுத்து ஐ.ஜி. திரிபாதி, டி.ஐ.ஜி. ஆறுமுகம் ஆகியோர் மேற்பார்வையில், துணை எஸ்பி விநாயகம், இன்ஸ்பெக்டர்கள் காதர்பாஷா, ஜான் கிளமண்ட் ஆகியோர் தலைமையில் தனிப் படை அமைக்கப்பட்டது.
இந்தப் படை ரகசிய விசாரணையில் ஈடுபட்டு சிலையை விற்க முயன்று வந்த சீனிவாசன் (58) என்பவரை அடையாளம் கண்டது. அவரை புரோக்கர்கள் வேடத்தில் போலீசார் நெருங்கி சிலைக்கு விலை பேசினர்.
சிலைக்கு ரூ.20 லட்சம் விலை பேசிய சீனிவாசன், நாமக்கல் பஸ் நிலையத்தில் வைத்து டீலிங்கை முடிக்கலாம் என்றார்.
இதையடுத்து சிலையை சாக்குமூட்டையில் கட்டிக்கொண்டு நாமக்கல் பஸ் நிலையத்திற்கு வந்தார் சீனிவாசன். அங்கு மாறுவேடத்தில் இருந்த தனிப்படை போலீசார் அவரை மடக்கினர். சிலையை மீட்டனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், இந்த சிலையை யாரோ இலங்கையில் இருந்து கடத்தி வந்து நாமக்கல்லை சேர்ந்த சரஸ்வதி என்ற பெண்ணிடம் தந்துள்ளனர். சரஸ்வதி இதை சீனிவாசனிடம் கொடுத்துவிட்டு இறந்துபோனார். இதனால் இந்த விஷயத்தில் இப்போது சீனிவாசன் மட்டுமே சிக்கியுள்ளார்.
இந்தியாவுக்குள் சிலையை கடத்தி வந்த கும்பல் குறித்து தகவல் ஏதும் கிடைக்கவில்லை.
கருடாழ்வார் சிலை மீட்பு:
இதேபோல, 3 ஆண்டுகளுக்கு முன் தேனி மாவட்டம் ஆனைக்கட்டி கிராமத்தில் உள்ள லட்சுமணபெருமாள் கோவிலில் திருட்டு போன கருடாழ்வார் ஐம்பொன் சிலையும் தனிப்படை போலீசாரால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது. ஐம்பொன்னால் ஆன இந்தச் சிலையின் மதிப்பு ரூ.15 லட்சமாகும்.
சிலையை திருடி விற்க முயன்ற தென்னரசு (25) என்பவர் கைது செய்யப்பட்டார். இவரது கூட்டாளிகளான ராமர், பெருமாள், குருநாதன் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்க 2 சிலைகளையும் மீட்ட தனிப் படையினரை கூடுதல் டி.ஜி.பி. நடராஜ், ஐ.ஜி. திரிபாதி, டி.ஐ.ஜி. ஆறுமுகம் ஆகியோர் வெகுவாக பாராட்டினர்.












Click it and Unblock the Notifications