சட்டசபை சிபிஎம் தலைவர் கோவிந்தசாமியின் பதவி பறிப்பு
சென்னை: சட்டசபை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் பதவியிலிருந்து கோவிந்தசாமி நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதில் பாலபாரதி புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருப்பூர் தொகுதி சிபிஎம் எம்.எல்.ஏ கோவிந்தசாமி. சட்டசபை கட்சித் தலைவராகவும் இருந்து வந்தார். துணைத் தலைவராக மதுரை கிழக்கு நன்மாறனும், கொறடாவாக திண்டுக்கல் பாலபாரதியும் இருந்து வருகின்றனர்.
2 நாட்களுக்கு முன்பு சிபிஎம் மாநிலக் குழுக்கூட்டம் நடந்தது. இதில், கோவிந்தசாமி மீது சரமாரியாக புகார்கள் கூறப்பட்டன. இதையடுத்து அவர் மீது கட்சி மேலிடம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கோவிந்தசாமியின் தலைவர் பதவி பறிக்கப்பட்டு அவருக்குப் பதில் பாலபாரதி புதிய தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
துணை தலைவராக நன்மாறனும், கொறடாவாக பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ மகேந்திரனும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் கோவிந்தசாமி நடந்து கொண்டதால் மாநில குழுவில் இருந்தும் நீக்கப்பட்டிருப்பதாக மாநில செயலாளர் வரதராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவிந்தசாமியின் திடீர் நீக்கம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications