நளினி: மனு மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முதலில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட நளினிக்கு, அத்தண்டனையை உச்சநீதிமன்றம ஆயுள்தண்டனையாக மாற்றியது. இதையடுத்து அவர் கடந்த 17 ஆண்டுகளாக வேலூர் மகளிர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் கருணை அடிப்படையில் தன்னை விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் என்றுகோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சமீபத்தில் மனு தாக்கல் செய்தார் நளினி.
இதுகுறித்து நளினி தாக்கல் செய்த மனுவில், நான் கடந்த 17 ஆண்டுகளாக வேலூர் மகளிர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளேன். 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருப்பவர்களை தமிழக அரசு விடுதலைசெய்து வருகிறது. அதேபோல கருணை அடிப்படையில் என்னையும் விடுவிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனு இன்று நீதிபதி நாகமுத்து முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தன்னையும் இந்த வழக்கில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று கோரி ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமி தாக்கல் செய்த மனுவை நீதிபதி பரிசீலித்து அதை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டார்.
பின்னர் சுவாமி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜகோபால் வாதிடுகையில், நளினியை விடுதலை செய்யக் கூடாது என்று கோரினார்.
நளினியின் வக்கீல் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் தேவை என்று கோரப்பட்டது. இதையடுத்து ஜூன் 18ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுவதாகவும், அதற்குள் தமிழக அரசும், மத்திய அரசும் பதில் மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications