பொன்னாடைக்கு பதில் கிடைத்த புத்தகங்கள்:மாணவர்களுக்கு வழங்கிய அமைச்சர்
ஈரோடு: தமிழக கைத்தறித்துறை அமைச்சர் என்.கே.கே.பி. ராஜாவுக்கு அரசு, கட்சி விழாக்களில் பொன்னாடைகளுக்குப் பதிலாக வழங்கப்பட்ட ரூ.7.5 லட்சம் மதிப்புள்ள நோட்டு, புத்தகங்கள் மாணவ- மாணவிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டன.
அமைச்சராக பதவி ஏற்றது முதல் கட்சி நிர்வாகிகள் யாரும் தனக்கு பொன்னாடை, மாலைகள் அணிவிக்க வேண்டாம் அதற்கு பதிலாக நோட்டு, புத்தகங்கள் வழங்கும்படி கூறி வந்தார்.
மீறி யாராவது தனக்கு மாலையோ அல்லது பொன்னாடையோ அணிவித்தால் அதற்கு அபராதம் வசூலித்து வந்தார்.
இந்த வகையில் அமைச்சரிடம் ரூ. 7.5 லட்சம் மதிப்புக்கு நோட்டு, புத்தகங்கள் குவிந்தன. அபராத தொகையாகவும் ரூ. 25,000 வசூலானது.
இந்த அபராத தொகையில் பேனா, பென்சில், ரப்பர், பை, வாய்ப்பாடு ஜியோமெண்டரி பாக்ஸ் உள்ளிட்ட பொருட்களை வாங்கினார் அமைச்சர்.
இதையடுத்து இந்த நோட்டு, புத்தகங்கள் மற்றும் பொருட்களை தனது எம்.எல்.ஏ. அலுவலகத்தில் வைத்து ஏழை, எளிய குழந்தைகளுக்கு வழங்கினார்.
ஈரோடு மேயர் குமார் முருகேஷ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு இவற்றை மாணவ-மாணவிகளுக்கு வழங்கினார். இதன்மூலம் 2,000 மாணவ-மாணவிகள் பயன் பெற்றனர்.