சிறுமியை கற்பழித்து கொன்றவருக்கு தூக்கு
கோவை: 13 வயது சிறுமியைக் கற்பழித்து மிகக் கொடூரமாக கொலை செய்த நபருக்கு கோவை மகளிர் நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
கோவை மாவட்டம் திருப்பூரை அடுத்த பெருமாநல்லூர் கூலிபாளையம் பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன். இவரது மகள் சந்தியா (13). இவர் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.
அதே பகுதியை சேர்ந்தவர் செந்தில் குமார் (34). திருமணமான இவர், விஸ்வநாதனின் உறவினர். அந்த வகையில் அடிக்கடி விஸ்வநாதன் வீட்டுக்கு சென்று வருவார்.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சந்தியா வீட்டில் குளித்துக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் அங்கு வந்த செந்தில்குமார் சந்தியா குளித்துக் கொண்டிருந்ததை திருட்டுத்தனமாக பார்த்து ரசித்தார்.
இதை கவனித்த விஸ்வநாதன் செந்தில் குமாரின் செயலை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அவரை வெளியே அழைத்து சென்று அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் நடந்த விவரத்தை கூறி கண்டித்தார். இதனால் அவமானம் அடைந்த செந்தில்குமார், விஸ்வநாதன் குடும்பத்தினரை பழிவாங்க திட்டமிட்டார்.
கடந்த 24.3.2007 அன்று மாலை 6.30 மணி அளவில் சந்தியா டியூசன் முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டில் யாரும் இல்லை. இதை கவனித்துக் கொண்டிருந்த செந்தில்குமார் நேராக சந்தியா வீட்டுக்கு சென்றார். சந்தியாவிடம் அத்தை உன்னை தோட்டத்துக்கு அழைத்து வர சொன்னார் என்று கூறினார்.
இதை நம்பிய சந்தியா செந்தில்குமாருடன் சென்றார். செந்தில்குமார் சிறுமி சந்தியாவை மொபட்டில் உட்கார வைத்து கடத்தி சென்றார். அதன் பின்னர் சந்தியா என்ன ஆனார் என்பது தெரியவில்லை.
இதுகுறித்து விஸ்வநாதன் பெருமாநல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். இந்த சமயத்தில், அன்று இரவு 10.30 மணி அளவில் சந்தியா பெருமாநல்லூரை அடுத்த பாறைகாட்டில் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
சந்தியா கொடூரமாக கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. சந்தியாவின் உடலில் 19 இடங்களில் வெட்டுக் காயங்கள் காணப்பட்டன.
போலீசார் தலைமறைவான செந்தில்குமாரை கைது செய்தனர். அவர் மீது கோவை மகளிர் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. பரபரப்பான இந்த வழக்கில் நேற்று மாலை தீர்ப்பு கூறப்பட்டது.
செந்தில்குமாருக்கு இந்திய தண்டனை சட்டம் 376-ன்படி (கற்பழிப்பு) ஆயுள் தண்டனையும், 364-ன்படி (மைனர் பெண்ணை கடத்துதல்) ஆயுள் தண்டனையும், 363-ன்படி (கடத்தல்) 3 ஆண்டு ஜெயில் தண்டனை, 500 ரூபாய் அபராதமும், 302-ன்படி (கொலை) தூக்கு தண்டனையும் விதித்து நீதிபதி தட்சிணாமூர்த்தி பரபரப்பு தீர்ப்பை அளித்தார்.
நீதிபதியின் தீர்ப்பில், தன்னால் எதிர்த்து போராட முடியாத அப்பாவி 13 வயது சிறுமியை கடத்தி சென்று கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் குற்றம் சாட்டப்பட்ட செந்தில்குமார் கற்பழித்து கொலை செய்துள்ளார்.
எதிர்காலத்தில் இது போன்ற கொடூரமான சம்பவங்கள் நடைபெறக் கூடாது என்பதற்காகவும் பெண் சமுதாயத்திற்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அதிகபட்ச தண்டனை விதிக்க வேண்டும் என்று அரசு தரப்பினர் கேட்டுக் கொண்டதற்கிணங்க குற்றம் சாட்டப்பட்ட செந்தில் குமாருக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
கோவை மகளிர் நீதிமன்றத்தில் தூக்குத் தண்டனை விதிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.