இரவு 10 மணிக்கு மேல் பொதுக்கூட்டம் நடத்த அதிரடி தடை
சென்னை: இரவு 10 மணிக்கு மேல் அரசியல் கட்சிகள், மத அமைப்புகள் உள்ளிட்டோர் பொதுக் கூட்டங்கள், கூட்டங்கள் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அதிரடித் தடை விதித்துள்ளது.
சென்னை ஷெனாய் நகரைச் சேர்ந்தவர் அற்புதராஜ். இவர் ஷெனாய் நகர் கஜலட்சுமி காலனி குடியிருப்போர் நலச்சங்கத்தின் தலைவராகஉள்ளார். உயர்நீதிமன்றத்தில் அற்புதராஜ் ஒரு பொது நலன் மனுவைத் தாக்கல் செய்தார்.
அதில், சென்னை அமைந்தகரை, புல்லாரெட்டி அவென்யூ நெடுஞ்சாலையில் அடிக்கடி அரசியல் கட்சிகளும், மத அமைப்புகளும் பொதுக் கூட்டங்கள், மத கூட்டங்களை நடத்துகின்றன.
இரவில் அதிக ஒலியுடன் கூடிய ஸ்பீக்கர்களை வைத்து இரைச்சலை ஏற்படுத்துகின்றனர். இதனால்அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலும், ஒலி மாசும் ஏற்படுகிறது. பொதுமக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.
எங்களது சங்கம் சார்பில் இரவு நேரப் பள்ளி ஒன்றை நடத்தி வருகிறோம். பொதுக் கூட்டங்களால் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே இரவில் நீண்ட நேரம் பொதுக் கூட்டம் நடத்தத் தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை தலைமை நீதிபதி ஏ.கே.கங்குலி, இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. பின்னர் நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், பொதுக் கூட்டம் நடத்த அரசியல் கட்சிகளுக்கு மாநகர காவல்துறை ஆணையரும், மாநகராட்சி ஆணையரும் அனுமதி கொடுத்தாலும், கூட்டம் நடத்தும் இடங்களில் சாலைகளை முழுமையாக அடைக்கக் கூடாது.
பொதுமக்கள், ஆம்புலன்ஸ் சென்று வர வழி இருக்க வேண்டும். இதை போலீஸார் உறுதி செய்ய வேண்டும்.
பொதுக் கூட்ட மேடைகள் 3 மணி நேரத்துக்கு மேல் தொடர்ந்து இருக்க போலீஸார் அனுமதிக்கக் கூடாது. அலுவலக நேரங்கள் மற்றும் முக்கிய நேரங்களில் பொதுக் கூட்டம் நடத்த அனுமதி வழங்கக் கூடாது.
கூட்டத்தில் குழாய் ஒலி பெருக்கி மற்றும் ஒலி எழுப்பும் சாதனங்களில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிமுறைக்கு உட்பட்டுத்தான் ஒலி எழுப்ப வேண்டும்.
இரவு 10 மணிக்கு மேல் எந்தக் காரணத்தைக் கொண்டும் பொதுக் கூட்டம் நடத்தக் கூடாது. பொதுக் கூட்டம் முடிந்ததும் உடனடியாக மேடையை அப்புறப்படுத்த வேண்டும். பழையை நிலையை அங்கு ஏற்படுத்த வேண்டும்.
தோண்டும் குழிகளை நிரப்ப வேண்டும். சட்ட விதிகளை மீறி சம்பந்தப்பட்ட இடங்களில் சேதங்கள் ஏற்படுத்தினால், மாநகராட்சி ஆணையர் நஷ்ட ஈடு வசூலிக்க வேண்டும். கூட்டம் நடத்த அனுமதி கேட்கும் அரசியல் கட்சிகளிடம் முன் கூட்டி குறிப்பிட்ட தொகை வசூலிக்க வேண்டும்.
உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு அளித்த உறுதிமொழியில் பொதுச் சாலைகளில் கூட்டம் நடத்த அனுமதிக்க மாட்டோம் என்று கூறப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது என்று தெரிவித்தனர்.
இந்தத் தடை உத்தரவு காரணமாக இரவு 10 மணிக்கு மேல் ராட்சத ஒலிபெருக்கிகளை கட்டி, நள்ளிரவு வரை பேசுவதற்கு முடிவு கட்டப்பட்டுள்ளது. மேலும் 'அனல் ஆறுமுகம்', 'தீப்பொறி திருமுகம்' போன்ற அடைமொழிகளோடு, மாற்றுக் கட்சியினரை ஆபாச வார்த்தைகளால் சாடும் செயல்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications