பாமக விலகினாலும் அரசுக்கு ஆபத்தில்லை.. காங். 'கை' கொடுக்கும்!
சென்னை: திமுக கூட்டணியிலிருந்து பாமக விலகினாலோ அல்லது விலக்கப்பட்டாலோ, அதனால் அரசுக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படாது.
சட்டசபையில் மொத்தமுள்ள 234 எம்எல்ஏக்களில் திமுக அணியில் 167 பேர் உள்ளனர்.
இதில் திமுகவுக்கு 95 எம்.எல்.ஏக்களும், காங்கிரஸுக்கு 35 பேரும், பாமகவுக்கு 18 பேரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 9 பேரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 பேரும் உள்ளனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் 2 பேரும் உள்ளனர்.
ஒரு சுயேச்சை எம்.எல்.ஏவும் திமுகவுக்கு ஆதரவாக உள்ளார்.
அதிமுக கூட்டணியில், மொத்தம் 66 பேர் உள்ளனர். அதில், அதிமுகவுக்கு 60 பேரும், மதிமுகவுக்கு 6 பேரும் உள்ளனர்.
தேமுதிக சார்பில் விஜயகாந்த் எம்.எல்.ஏவாக உள்ளார். மீதமுள்ள ஒரு உறுப்பினர் சபாநாயகர்.
தற்போது பாமகவுக்கும், திமுகவுக்கும் இடையே உறவு கசந்து விட்டது. இன்னும் சில நாட்களில் திமுக அணியிலிருந்து பாமகவிலகலாம் அல்லது பாமகவை திமுக, கூட்டணியிலிருந்து நீக்கலாம்.
அப்படி ஒரு நிலை ஏற்பட்டால், பாமக அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெற்றால், அரசுக்கு எந்தப் பிரச்சினையும் ஏற்படாது. பெரும்பான்மை பலத்துக்கு 118 உறுப்பினர்கள் தேவை. பாமக நீங்கலாக பார்த்தால் கூட திமுக அரசுக்கு 149 எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருக்கும். எனவே அரசுக்கு எந்தவிதப் பிரச்சினையும் இல்லை.
இன்னும் சொல்லப் போனால், காங்கிரஸ் கட்சி தவிர மற்ற அனைத்துக் கட்சிகளும் ஆதரவை விலக்கிக் கொண்டாலும் கூட திமுக அரசு தப்பிவிடும். இதனால் காங்கிரஸ் கட்சியின் ஆதரவுதான் திமுகவுக்கு மிக மிக முக்கியம்.
மத்தியில் திமுகவில் தயவில் காங்கிரஸ் வண்டியை ஓட்டி வருவதால் தமிழகத்தில் அந்தக் கட்சியின் ஆதரவு திமுகவுக்கு தொடரும்.
ஆனால், பாமக விலகினால் திமுக ஆட்சியில் பங்கு வேண்டும் (அமைச்சர் பதவி) என்ற காங்கிரஸ் எம்எல்ஏக்களின் பழைய குரல் மீண்டும் எழலாம்.
முதல்வர் கருணாநிதிக்கு டெல்லியின் முழு ஆதரவும் இருப்பதால் தமிழக காங்கிரசின் அந்தக் குரல் சென்னையை தாண்டுவது கஷ்டமே.