பணவீக்கம் குறித்து கவலை வேண்டாம்: ப.சிதம்பரம்
சென்னை: பண வீக்கம் குறித்து பொது மக்கள் பீதி அடையத் தேவையில்ல. இக்கட்டான நிலையில் கவலைப்படாமல் அதை சந்திக்கப் பழகிக் கொள்ள வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
பணவீக்கம் இதுவரை இல்லாத அளவாக 8.75 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதிகரித்து வரும் விலைவாசி உயர்வும், சமீபத்திய பெட்ரோல், டீசல் விலை உயர்வுமே இதற்குக் காரணம்.
இந் நிலையில், சென்னை சேத்துப்பட்டில் கிறிஸ்தவ கல்லூரி மேல்நிலைப்பள்ளியின் புதிய கட்டிட திறப்பு விழா மற்றும் புதிதாக தொடங்கப்பட்டுள்ள ஆரம்ப பள்ளியின் தொடக்க விழாவில் சிதம்பரம் பேசுகையில்,
பன்னாட்டு நிறுவனத்தில் வேலை பார்ப்பவரும் செல்போன் வைத்திருக்கிறார். காய்கறி விற்பவரும் செல்போனை பயன்படுத்துகிறார். வளரும் பொருளாதாரமும் ஏற்றத் தாழ்வுகளை சமப்படுத்துகிறது. வளரும் பொருளாதாரம் நமக்கு பல வாய்ப்புகளை ஏற்படுத்துகிறது. அதே நேரத்தில் சில பின்னடைவுகளும் ஏற்படுகின்றன.
நாடு மிக கடினமான பாதையில் செல்வதாக சிலர் கூறுகிறார்கள். இந்தியா சுதந்திரம் அடைந்து இத்தனை வருடங்களில் எந்த 5 ஆண்டுகளிலும் இல்லாத அளவுக்கு 9 சதவீத வளர்ச்சி பெற்றுள்ளது. சுற்றுலா, போக்குவரத்து, தொலைத் தொடர்பு, ஊரக மேம்பாடு, கல்வி ஆகிய துறைகள் எப்போதும் இல்லாத அளவுக்கு மிக அதிக வளர்ச்சி அடைந்துள்ளன. உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளது.
எந்த பன்னாட்டு மாநாடு, கருத்தரங்காக இருந்தாலும் அதில் இந்தியாவின் கருத்துகளுக்கு இப்போது செவி சாய்க்கப்படுகிறது. காரணம், நமது பொருளாதார வளர்ச்சி.
இருந்தாலும் சில சிக்கல்களும் உள்ளன. அதற்கு உலக அளவில் நிலவி வரும் கச்சா எண்ணெய் விலை உயர்வும், உலக அளவில் அத்தியாவசிய பொருட்களான உணவுப் பொருள்கள் உற்பத்தி 2 ஆண்டுகளில் குறைந்ததும் தான் முக்கிய காரணமாகும்.
உலகளவில் உணவு, தானிய இருப்பு மிக குறைவாக உள்ளது. ஆனால், இந்தியாவை பொறுத்தவரை வேளாண் உற்பத்தி சிறப்பாக உள்ளது. மற்ற ஆண்டுகளை விட சாதனை அளவாக கோதுமை, அரிசி கையிருப்பு அதிகமாக உள்ளது.
கடந்த 1998-2004ம் ஆண்டுகளில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 13 முதல் 35 டாலர்களாக இருந்தது. தற்போது 134 முதல் 139 டாலர்களாக உயர்ந்துள்ளது. இது மிக கடினமான சூழல். இதைப் போன்ற பல்வேறு கடினமான சூழ்நிலைகளை நாடு ஏற்கனவே எதிர்கொண்டுள்ளது.
இந்திய சுதந்திரப் போராட்டம், 1960-70 ஆண்டுகளில் அண்டை நாடுகளின் படையெடுப்பு, 1970-80களில் கடும் வறட்சி என பாதிக்கப்பட்டோம். ஆனால், அனைத்தையும் நாம் வெற்றிகரமாக மீண்டு வந்திருக்கிறோம். தற்போதைய சூழலையும் நாம் வெற்றிகரமாக மீண்டு வருவோம். நம்மால் எதுவும் செய்ய முடியும்.
உலகிலேயே மிகப் பெரிய பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையம் நம்மிடம்தான் உள்ளது. மிகக்குறைந்த விலையில் இரும்பு, அலுமினியத்தை நாம்தான் தயாரிக்கிறோம். ஆட்டோமொபைல், மருந்து பொருட்கள், ஜவுளித் துறையில் மற்ற நாடுகளுக்கு சவால் விடும் வகையில் இருக்கிறோம்.
தற்போதுள்ள சூழ்நிலையில் இருந்து நாடு மீண்டு வருவதற்கு அரசுக்கு மக்களும் ஒத்துழைப்பு அளிப்பது கடமையாகும். நம்முடைய குழந்தைகளுக்கு இந்தியாவின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்று சொல்ல வேண்டும்.
இந்தியாவில் தற்போது பொருளாதார சூழல் எதுவாக இருந்தாலும், மாணவர்கள் தாங்கள் நினைக்கும் கனவை அடைய முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இந்தியா வளமை மிக்க நாடாக உருவெடுக்கும் என்றார் சிதம்பரம்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், பணவீக்கம் சரியாகி விடும். தற்போதைய கஷ்ட நிலையைக் கண்டு மக்கள் கவலைப்படக்கூடாது. அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
நாம் சாதனைகளை படைத்தபோது அனைவரும் பெருமைப்பட்டோம். அதேபோல கஷ்டம் நேரிடும்போது கவலைப்படாமல் அதை சந்தித்து சமாளிக்கவும் பழகிக் கொள்ள வேண்டும்.
மக்களின் பிரச்சினையை தீர்க்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. அதை நிச்சயம் அரசு செய்யும்.
மீடியாக்களும் பண வீக்க உயர்வை மிகைப்படுத்தி செய்தி வெளியிடக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்.
நமது பொருளாதார வளர்ச்சி கடந்த ஐந்து ஆண்டுகளாக ஸ்திரமாக உள்ளது. இதை நாம் மறந்து விடக் கூடாது. இதுவரை இப்படி ஒரு ஸ்திரமான, நிலையான வளர்ச்சியை நாம் கண்டதில்லை என்றார் ப.சிதம்பரம்.












Click it and Unblock the Notifications