பாமக மீதான திமுக நடவடிக்கை: 'அதிமுக-பாஜக லாபமடைந்துவிட கூடாது'
சென்னை: பாமக மீது நடவடிக்கை எடுப்பதன் மூலம் அதிமுக-பாஜக போன்ற பொது எதிரிகள் பயன்பெறும் வகையில் அவர்களுக்கு சாதகமான முடிவு எதையும் திமுக எடுத்து விடக் கூடாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வரதராஜன் கூறியுள்ளார்.
செய்தியாளர்களிடம் அவர் பேசுகையி்ல்,
பாமக கட்சிக் கூட்டத்தில் பேசப்பட்டதை (காடுவெட்டி குரு பேச்சு) பதிவு செய்த சி.டியை நாங்கள் கேட்கவில்லை. ஆனால், பாமக பிரமுகர் குருவின் பேச்சு, தொடர்ந்து வன்முறையை தூண்டும் வகையிலேயே தான் இருந்து வருகிறது. அவரை கட்டுப்படுத்துவதற்கு பதிலாக, அவர் பேசுவதை நியாயப்படுத்தி பாமக நிறுவனர் ராமதாஸ் பேசுவது துரதிருஷ்டவசமானது.
இந்தப் பிரச்சினையை திமுக தலைமை நிதானத்தோடு அணுக வேண்டும். அதிமுக, பாஜக போன்ற பொது எதிரி ஆதாயப்படும் முடிவை திமுக எடுக்கக்கூடாது.
புதிதாக அரசியலுக்கு வந்துள்ள விஜயகாந்த், விலைவாசி பிரச்சினை பற்றி பேசுகையில், கம்யூனிஸ்டுகளை கபடதாரிகள், வேடம் போடுகிறார்கள் என்று சொல்லியிருக்கிறார். அவர்தான் வேடதாரி.
எங்களைப் பற்றி பேசக் கூட விஜய்காந்த் போன்றவர்களுக்கு அருகதை கிடையாது. விலைவாசி பிரச்சினை தேர்தல் மூலம் தீர்க்கப்படக்கூடியதல்ல.
நாங்கள் மத்திய ஆட்சிக்கு ஆதரவை விலக்கிக் கொண்டால், காபந்து அரசு பொறுப்பேற்கும். தேர்தல் நடத்தை விதிகள் அமலாகும். அப்போது, விலைவாசியை தற்காலிக அரசால் குறைக்க முடியாது.
எனவே, ஆட்சிக்கு ஆதரவை வாபஸ் வாங்கினால் விலைவாசி குறையாது. எனவே, விலைவாசியை இப்போதுள்ள மத்திய அரசு குறைப்பதுதான் ஒரே வழி என்றார் வரதராஜன்.
அகில இந்திய சிஐடியு செயலாளருமான அவர் இந்தியன் வங்கி ஊழியர் சங்கத்தின் 14வது மாநில மாநாட்டை தொடங்கி வைத்து பேசுகையில்,
அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை கருத்தை பிரதமர் மன்மோகன் சிங் கேட்கப் போகிறாரா?. அல்லது அமெரிக்காவின் உத்தரவுக்கு செவி சாய்க்க போகிறாரா?.
அவரது செயல்பாடுகள் தேசபக்தி இல்லாதவர் போல் உள்ளன. அமெரிக்காவின் கருத்துக்கு செவி சாய்த்தால் அவர் பிரதமர் பதவியில் நீடிக்க தகுதி வாய்ந்தவர் அல்ல என்பதே எங்கள் கருத்து.
நம் நாட்டில் 7 ஆண்டுகளாக இல்லாத பணவீக்கம் தற்போது ஏற்பட்டுள்ளது. இது குறையும், பொறுத்திருந்து பாருங்கள் என்று நிதியமைச்சர் ப.சிதம்பரமும், பிரதமரும், சோனியா காந்தியும் சொல்கிறார்கள். இப்படி சொல்வதற்கு இவர்கள் எதற்கு ஆட்சியில் இருக்க வேண்டும்?.
சர்க்கரை, அரிசி, கோதுமை, எண்ணெய் போன்ற சமையல் பண்டங்களின் விலையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சாதாரண மக்களுக்கு மட்டுமின்றி, அனைத்து தரப்பினருக்கும் ரேஷன் கடைகளில் பொருள்களை வினியோகிக்க வேண்டும்.
நம் நாட்டில் 77 சதவீத குடும்பங்களில் ஒரு நாள் வருமானம் ரூ.20க்கும் குறைவாக உள்ளது. இந்த நேரத்தில் விலைவாசி அதிகரித்துக் கொண்டே போனால் நிலைமை என்னாவகும்? என்றார்.












Click it and Unblock the Notifications