'ஏசி': ஹோட்டல் ஊழியர்களுடன் ஸ்ரீசாந்த் மோதல்

ஸ்ரீசாந்த் அவ்வப்போது சர்ச்சையிலும் சலசலப்பிலும் சிக்கி வருவது அதிகரித்து வருகிறது. சமீபத்தில், ஹர்பஜன் சிங், ஸ்ரீசாந்த்தை கன்னத்தில் அறைந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந் நிலையில் ஸ்ரீசாந்த்தால் பெங்களூரில் சலசலப்பு ஏற்பட்டது. காயம் காரணமாக சமீபத்தில் முடிந்த வங்கதேச முத்தரப்பு தொடரில் ஸ்ரீசாந்த் விளையாடவில்லை. பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் கடந்த ஒரு வாரமாக அவர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
பெங்களூரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்து இந்த சிகிச்சை பிளஸ் பயிற்சி முகாமில் அவர் பங்கேற்றுள்ளார்.
இந்த நிலையில் தான் தங்கியிருந்த அறையில், ஏசி இயந்திரத்திலிருந்து அதிக அளவில் சப்தம் வந்ததால் கடுப்பாகியுள்ளார் ஸ்ரீசாந்த். இதையடுத்து நள்ளிரவில் ஹோட்டல் நிர்வாகத்தை அழைத்து உடனியாக ஏசியை மாற்றுமாறு கூறியுள்ளார்.
ஆனால் இந்த நேரத்தில் எங்கே போய் யாரைக் கூப்பிடுவது என்று ஹோட்டல் நிர்வாகம் கூறியுள்ளது. இதையடுத்து மீடியாக்களுக்குத் தகவல் கொடுத்தார் ஸ்ரீசாந்த். அவர்களும் அடித்துப் பிடித்துக் கொண்டு ஹோட்டலுக்கு ஓடினர்.
ஆனால் அத்தனை செய்தியாளர்களுக்கும் அதிர்ச்சி தரும் வகையில், ஒன்றும் நடக்கவில்லை, நீங்கள் போய் வாருங்கள் என்றார் ஸ்ரீசாந்த். நீங்கள்தானே கூப்பிட்டீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்டபோது, ஒரு பிரச்சினையும் இல்லை என்று கூலாக கூறி விட்டார் ஸ்ரீசாந்த். அதேபோல ஹோட்டல் நிர்வாகமும், எந்தப் பிரச்சினையும் இல்லை என்று கூறினர்.












Click it and Unblock the Notifications