மோடி குறித்த கனிமொழி பேச்சு-பாஜக கண்டனம்
சென்னை: குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை சர்வாதிகார தலைவர் என்று திமுக எம்.பி.கனிமொழி வர்ணித்திருப்பது கண்டனத்துக்குரியது என்று தமிழக பாஜக பொதுச்செயலாளர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடலூரில் நடைபெற்ற திமுக மகளிரணி மாநாட்டில் குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடியை சர்வாதிகார தலைவர் என்றும், பாஜகவை மதவாத கட்சி என்றும் கூறியுள்ளார்.
பாஜகவை மதவாத கட்சி என்று கூறும் கனிமொழி திமுக அந்த கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொண்டு மத்தியில் ஆட்சி செய்தது என்பதை மறந்து விடக் கூடாது. அதிமுக தலைவர் ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகம் இன்னொரு குஜராத்தாக மாறி விடும் என்று கூறியிருப்பது தேவையற்ற பேச்சாகும்.
நாட்டில் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகளால் மக்கள் படும் அவதி பற்றி தெரியாததால்தான் மத அடிப்படைவாதம் போன்ற பிரச்சனைகளை கனிமொழி பேசி வருகிறார். பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் மாநிலங்களில் ஒன்றாக குஜராத் திகழ்ந்து வருகிறது. குஜராத் முதலமைச்சர் மோடி பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு நலத்திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தி வருகிறார்.
ஆனால் தமிழகத்திலோ கடந்த இரண்டு ஆண்டுகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வந்துள்ளது என்று கூறியுள்ளார் தமிழிசை.












Click it and Unblock the Notifications