'ஒன்றும் தெரியாத' டீச்சரால் பார்வையற்ற மாணவி படிப்பு பாழ்!
சென்னை: கணக்குப் பதிவியல் குறித்து தெரியாத ஆசிரியையை வைத்து தேர்வு எழுதிய பார்வையற்ற மாணவி, அந்த ஆசிரியையின் சொதப்பலால் தேர்வில் பரிதாபமாக தோல்வியைத் தழுவியுள்ளார்.
சென்னை பெரம்பூரைச் சேர்ந்தவர் எமிலோய் இமானுவேல். ஆங்கிலோ இந்தியரான இவர், பார்வையற்றவர். அதனால் மற்ற மாணவிகளைப் போல் பள்ளியில் சேர்ந்து படிக்காமல், வீட்டில் இருந்தபடியே தனித்தேர்வு மூலம் படித்து வந்தார்.
கடந்த மார்ச்சில் நடந்த பிளஸ் 2 தேர்வை, தனித்தேர்வராக எழுதினார். அண்ணாநகர் ஜெயகோபால் கரோடியா பள்ளியில் எல்லா தேர்வுகளையும் எழுதினார். பார்வையற்றவர் என்பதால், இவர் கூறும் விடையை எழுதுவதற்கு ஆசிரியை ஒருவரை தேர்வுத்துறை நியமித்தது.
சமீபத்தில் தேர்வு முடிவுகள் வெளியானபோது, முடிவைப் பார்த்து எமிலோய் அதிர்ச்சி அடைந்தார். எல்லா பாடங்களிலும் அதிகமான மதிப்பெண்களைப் பெற்றவர், கணக்குப் பதிவியல் பாடத்தில் மட்டும் 36 மதிப்பெண்கள் பெற்று தோல்வி அடைந்தார். தேர்வுத் துறையும், விடையை எழுதிய ஆசிரியையும் சேர்ந்து செய்த குளறுபடி தான், தோல்விக்குக் காரணம் என தற்போது தெரியவந்துள்ளது.
தேர்வின்போது ஏற்பட்ட குளறுபடி குறித்து, மாணவி தனது தாயாருடன் தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகத்திற்கு வந்து விவரம் கேட்டார். ஆனால் அவருக்கு அதிகாரிகள் உரிய பதிலைத் தெரிவிக்கவில்லையாம்.
இதுகுறித்து அவர் கூறுகையில், எல்லா தேர்வுகளின்போதும் நான் விடையை சொல்லச் சொல்ல, எனக்காக அமர்த்தப்பட்ட ஓர் ஆசிரியை விடை எழுதினார். கணக்குப் பதிவியல் தேர்வு நடைபெறும் நாளன்று, தேர்வு அறைக்குச் சென்றதும், "கணக்குப்பதிவியல் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது; நான் எப்படி விடை எழுதுவது' என அவர் புலம்பினார்.
அவரின் புலம்பல் எனக்கு தூக்கி வாரிப் போட்டது. கணக்குப் பதிவியல் பாடத்தில் பற்று, வரவு என்று கணக்குகளைப் போட வேண்டும். அந்தப் பாடத்தைப் பற்றி அறிந்தவராக இருந்தால் தான், நான் விடையைக் கூறும்போது அவரால் உடனடியாகப் புரிந்துகொண்டு எழுத முடியும். கடைசி நேரத்தில் என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
நான் பதிலை சொல்லும்போது, எப்படி எழுதுவது எனக் கேட்டு தடுமாறினார். ஆங்கிலத்தில் 140, பொருளியலில் 106, அரசியல் அறிவியலில் 114, வணிகவியல் பாடத்தில் 124 மதிப்பெண்களைப் பெற்ற நான், கணக்குப்பதிவியலில் மட்டும் வெறும் 36 மதிப்பெண்களைப் பெற்று தோல்வி அடைந்துள்ளேன்.
இந்த தோல்விக்கு எனக்கு விடையை எழுதிய ஆசிரியையும், தேர்வுத் துறையின் திட்டமிடாத செயல்பாடும் தான் காரணம். தோல்வி அடைந்த பாடத்தை மீண்டும் எழுதி வெற்றி பெறுவேன் என்றார் எமிலோய்.
பொருத்தமில்லாத ஆசிரியையால் எமிலோய் பாதிக்கப்படுவது இது முதல் முறை இல்லையாம். இவர் பத்தாம் வகுப்புத் தேர்வை எழுதியபோது, கணிதப் பாடத்திற்கு, உடற்பயிற்சி ஆசிரியர் ஒருவரை தேர்வு எழுத அனுப்பினராம். இதன் காணமாக, மற்ற பாடங்களில் நல்ல மதிப்பெண் பெற்றும் கணிதத்தில் மட்டும் குறைந்த மதிப்பெண்கள் எடுத்து தோல்வி அடைந்தாராம் எமிலோய்.
ஆனால் தேர்வுத்துறை இதற்கு வேறு மாதிரியான காரணத்தைச் சொல்கிறது. அதாவது, உரிய பாட ஆசிரியர் அல்லது ஆசிரியையை நியமித்தால், மாணவ, மாணவியருக்குப் பதில் அவர்களே விடையை எழுதி விடும் வாய்ப்பு உள்ளது. அதைத் தவிர்க்கவே வெவ்வேறு பாட ஆசிரியர்கள் நியமிக்கப்படுவது வழக்கம் என்றனர்.
எமிலோய் விவகாரம் குறித்து விசாரிக்கப்படும் எனவும் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications