'அதற்குள் சாப்பாட்டு ஞாபகமா?'
சென்னை:
அன்புமணி மீது எனக்கு அன்பு உண்டு. மத்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து பாமகவை வெளியேற்றக் கோர மாட்டோம் என முதல்வர் கருணாநிதி கூறினார்.
பாமகவை கூட்டணியில் இருந்து வெளியேற்றி நிலையில் அவர் அளித்த பேட்டி:
கேள்வி: ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து பாமகவை வெளியேற்றக் கோருவீர்களா?
கருணாநிதி: அப்படி நாங்கள் கேட்பதாக இல்லை.
கேள்வி: மத்திய அமைச்சரவையில் பாமக தொடர அனுமதிப்பீர்களா?
கருணாநிதி: அன்புமணி மீது அன்பு உண்டு. அன்புமணிக்கும், எனக்கும், திமுகவிற்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை.
கேள்வி: ராமதாஸ் மீண்டும் பேசினால் கூட்டணி தொடருமா?
கருணாநிதி: கற்பனைக்கு பதில் சொல்ல முடியாது.
கேள்வி: சோனியா காந்தியிடம் பாமகவை வெளியேற்றியதன் காரணம் என்ன என்று கூறுவீர்களா?
கருணாநிதி: அவர்கள் கேட்கவும் இல்லை. சொல்ல வேண்டிய அவசியம் ஏற்படவும் இல்லை.
கேள்வி: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மறப்போம் மன்னிப்போம் என்று கூறி ராமதாஸ் கூட்டணிக்கு வந்தால் ஏற்றுக் கொள்வீர்களா?
கருணாநிதி: மறப்போம் என்று நான்தான் சொல்ல வேண்டும். அவர் சொல்லக் கூடாது.
கேள்வி: மதச்சார்பற்ற வாக்குகள் பிரியக் கூடாது என்பதற்காக கூட்டணி கட்சிகள் வலியுறுத்தினால் பாமகவுடன் மறுபடியும் உறவு தொடருமா?
கருணாநிதி: பாஜக ஆட்சிக்கு வரக்கூடாது என்று நீங்கள் உறுதியாக இருக்கிறீர்கள். இந்த விஷயத்தை ராமதாசிடம் சொல்வீர்கள் என்று நம்புகிறேன்.
கேள்வி: இந்த முடிவால், ரயில்வே திட்டங்களும், சுகாதார திட்டங்களும் பாதிக்கப்படுமா?
கருணாநிதி: தண்டவாளத்திலிருந்து ரயில் கீழே இறங்கி விடுகிறது என்ற பாதிப்புகளைத் தவிர வேறு எந்த பாதிப்பும் வரும் என்று நான் நினைக்கவில்லை. ஏனென்றால் ரயில்வே துறையைப் பொறுத்தவரை அங்கே இருக்கின்ற பெரியவர் லல்லுவும் சரி, இங்கேயுள்ள துணை மந்திரியும் சரி, சுகாதாரத்துறை மந்திரியும் சரி நல்லவர்கள் என்பது என் கருத்து.
கேள்வி: ஆடு பகை, குட்டி உறவு என்பது சரிப்பட்டு வருமா?
கருணாநிதி: அதற்குள் சாப்பாட்டு ஞாபகமா?
கேள்வி: பாமகவுக்குப் பதில்வேறு ஏதாவது கட்சி உங்கள் அணிக்கு வருமா?
கருணாநிதி: அப்படிக்கட்சிகள் வந்தே ஆக வேண்டும் என்று எதுவும் இல்லை.
கேள்வி: கூட்டத்திற்கு உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏன் வரவில்லை?
கருணாநிதி: அவர் வெளிநாடு சென்றிருக்கிறார். நேற்றைய தினம் என்னிடம் தொலைபேசியில் பேசினார். புதன்கிழமை (இன்று) சென்னை திரும்புவதாக தெரிவித்தார் என்றார் முதல்வர் கருணாநிதி.