உலகத் தமிழ் இயக்கத்துக்கு கனடா தடை
உலகத் தமிழ் இயக்கத்தை, விடுதலைப் புலிகள் ஆதரவு அமைப்பாகவும் கனடா அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து கனடா பொது பாதுகாப்பு துறை அமைச்சர் ஸ்டாக்வெல் டே கூறுகையில், டொரன்டாவைத் தலைமையிடமாக கொண்டு உலகத் தமிழ் இயக்கம் செயல்பட்டு வருகிறது. கனடா மக்களின் பாதுகாப்பைக் கருத்தில்
கொண்டு இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரித்து கொடுக்கும் பணியில் இந்த அமைப்பு ஈடுபட்டு வருகிறது. இதை நிரூபிக்கத் தேவையான போதுமான ஆதாரங்கள் அரசிடம் உள்ளன.
ஆகவே இந்த அமைப்பு தீவிரவாத குழு பட்டியலில் சேர்க்கப்பட்டு, கனடாவில் இயங்கிட தடை விதிக்கப்படுகிறது. மேலும் உலகத் தமிழ் இயக்கத்தின் சொத்துக்களையும், வங்கிக் கணக்குகளையும் முடக்கி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கனடா நாட்டு வங்கிகள், இன்சூரன்சு கம்பெனிகள், கடன் வழங்கும் அமைப்புகளுக்கு தெளிவான தகவல் அனுப்பப்பட்டு இருக்கிறது. உலகத் தமிழ் இயக்கத்தின் வங்கிக் கணக்கு குறித்த ஆவணங்களை தாக்கல் செய்யும்படியும் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.
எங்களுக்கு கிடைத்த வலுவான ஆதாரங்களுக்குப் பின்பே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. எனவே, உலகத் தமிழ் இயக்கத்துடன் யாரும் தனியாகவோ, கூட்டாவோ இணைந்து செயல்படவும் தடை விதிக்கப்படுகிறது என்றார் அவர்.
ஆனால் இந்தப் புகார்களை உலகத் தமிழ் இயக்கம் மறுத்துள்ளது. கடந்த 2006ம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு கனடா அரசு தடை விதித்தது நினைவிருக்கலாம்.
கனடாவில் 1986-ம் ஆண்டு முதல் உலகத் தமிழ் இயக்கம் இயங்கி வருகிறது. 2001-ம் ஆண்டு தீவிரவாத எதிர்ப்புச் சட்டத்தை இயற்றிய பின் இந்த அமைப்பின் நடவடிக்கைகள் குறித்து அந்நாட்டு அரசாங்கம் தீவிரமாக கண்காணித்து வந்தது.
இந்த நிலையில், உலகத் தமிழ் இயக்கத்தை கனடா அரசு தீவிரவாத குழு பட்டியலில் சேர்த்து இருக்கிறது.